Wednesday, December 30, 2009

கல்வி ஸ்பெஷல் : படிக்க... ஜெயிக்க... 100 சூப்பர் டிப்ஸ்!

கல்வி ஸ்பெஷல் : படிக்க... ஜெயிக்க... 100 சூப்பர் டிப்ஸ்!


விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், "கல்வி என்பது என்ன?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு, "நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும். ஆனால், அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இருக்கிறதோ... அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி" என்றாராம் ஐன்ஸ்டீன்.

'வெள்ளத்தாலும், நெருப்பாலும் அழிக்க முடியாத பெருஞ்செல்வம், ஒருவன் கற்ற கல்வி' என்றார் வள்ளுவர்.

நம் வீட்டுக் குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேறினால் போதும் என நல்ல ஸ்கூல் தேடி அலைந்து, க்யூவில் நின்று அப்ளிக்கேஷன் வாங்கி பல ஆயிரங்களை செலவு செய்து அந்த கல்வியைக் கொடுப்பதற்கு காரணமே... அதைத் தவிர பெருஞ்செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதுதான். அத்தகைய கல்வி... முழுமையான, சிறந்ததான, பயன் கொடுக்கவல்லதாக அமைய சில அனுபவ வழிமுறைகளைச் சொல்கிறது இந்த டிப்ஸ் புத்தகம். உங்கள் அனுபவத்தோடு இதனையும் சேர்த்து செயல்படுத்திப் பாருங்கள். தனலஷ்மியையும் தானே அழைத்து வருவாள் சரஸ்வதி!

ஆல் த பெஸ்ட்!

ப்ப்ப்ளான் பண்ணி... படியுங்கள்!

1. ஆசிரியருக்காக, மார்க்குக்காக ஒரு பாடத்தை 'படிக்க வேண்டுமே...' என படிக்காமல், என்ன நோக்கத்துக்காகப் படிக்கிறோம் என்ற தெளிவுடன் படித்தால், படிப்பது உடனே மனதில் பதியும்.

2. சில பாடங்களை நேரடியாகப் படிக்காமல், அதற்கு முந்தைய... அதாவது ஐந்தாம் பாடமென்றால், நான்காம் பாடத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, அடுத்த பாடத்துக்கு வந்தால் படிக்கப் படிக்க எளிதாக இருக்கும். குழப்பங்கள் வராது.


3. 'எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும்..?' - இதுதான் எல்லாருக்கும் வருகிற முதல் சந்தேகம். தொடர்ந்து 40-45 நிமிடங்கள் படிக்கலாம். திடீரென மூளை சோர்வடைந்தது போல் தோன்றினால் 5 நிமிட ரெஸ்ட்டுக்குப் பிறகு மீண்டும் தொடரலாம். எவ்வளவு மணி நேரம் என்பது அவரவர் திறமையையும், பாடத்திட்டத்தையும் பொறுத்தது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

4. இந்த சப்ஜெக்டை இத்தனை மணி நேரத்துக்குள் படித்துவிட வேண்டும் என்ற முடிவோடு உட்காருங்கள். உதாரணமாக, பாட்டனியில் தாவர செல் அனாடமியை காலை 6.30 - 7.30-க்குள் படித்து முடித்து விட வேண்டும் என்று உட்காருங்கள். நிச்சயம் முடித்திருப்பீர்கள். அப்படி முடியாமல் போனால் இன்னும் அரை மணி நேரத்துக்குள் படிக்க வேண்டும் என்று நேரத்தை நீட்டியுங்கள். நேர நிர்வாகம் படிப்பில் மிக முக்கியம்.

5. 'இந்த நேரத்துக்குள் இந்த சப்ஜெக்ட்டை படித்து முடித்து விடுவேன்' என்று நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, உங்கள் திறமை, பாடத்தின் எளிமை, கடினம் இதையெல்லாம் கணக்கிட்டு, 'டைம் அலாட்' செய்யுங்கள்.

6 கஷ்டமான மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஃபார்முலாக்கள், உயிரியல் சயின்டிஃபிக் நேம்ஸ்களை டேப், சி.டி. அல்லது பென்டிரைவ்வில் பதிவு செய்து போட்டுக் கேட்கலாம்.

7. உங்களுக்கு ஒரு பாடமோ, ஒரு பாடத்தில் ஒரு பிரிவோ புரியவில்லை எனில், அதை நீங்களே வாய்விட்டு ஆசிரியர் போல உங்களுக்கே சொல்லித் தந்து பாருங்கள். உடனே எளிமையாகப் புரியும்.

8. எல்லாவற்றையும்விட, 'நன்றாக படிப்பது என்பது என் பொறுப்பு. அதுதான் என் வேலை. என்னைப் பெற்றவர்களுக்கு நான் செய்யும் சிறந்த கடமை' என்ற எண்ணத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆழமாக பதியவைத்துக் கொண்டால், கடமை கரும்பாக இனிக்கும்.

9. எங்கு படிக்க வேண்டும்..? எங்கு வேண்டுமானாலும். ஆனால், படிக்கும் சூழல்... அமைதியாக, சுத்தமாக, கவனத்தை சிதறடிக்காத இடமாக இருத்தல் அவசியம்.

ஸ்பெஷல் ஸ்டடி...குரூப் ஸ்டடி!

10. யாருடனும் உட்கார்ந்து படிக்காமல் தனியாக உட்கார்ந்து படித்தால்தான் உடனே மனதில் பதியும் என்று நம்பினால் தொடர்ந்து அப்படியே படியுங்கள். 'குரூப் ஸ்டடி' கை கொடுத்தால், நல்ல குரூப் அமைத்துக் கொள்ளுங்கள்.

11. எந்த நேரத்தில் படித்தால் மிகச் சிறப்பாகப் படிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு காலை என்றால் காலையிலோ... மாலை என்றால் மாலையிலோ படியுங்கள்.

12. எந்தப் பாடத்தைப் படிக்கப் போகிறீர்களோ... அந்த பாடத்தை விருப்பத்தோடு பிரியுங்கள்... படியுங்கள். அதன் பலன், பல மடங்கு இருக்கும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் 'கால்குலஸ்' சேப்டர் மண்டையை காய வைக்கும் என்ற எரிச்சலுடன் உட்காருவதைவிட, 'என்னால் ஈஸியாக இதைப் படிக்க முடியும்... என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்..?' என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்துப் பாருங்கள். கால்குலஸும் இனிக்கும்!

13 உங்கள் மூளைக்கு அதிக திறன் இருக்கலாம். ஆனால், அதன் கவனம் ஒன்றின் மீது மட்டும் குவியும்போது பலன் அதிகமிருக்கும். எனவே, டி.வி. பார்த்துக் கொண்டோ, எஃப்.எம். கேட்டுக் கொண்டோ ஃபிசிக்ஸைப் படித்தால் ஃபிசிக்ஸும் மனதில் உட்காராது. பாட்டும் உட்காராது.

14 ஃப்ரெண்ட்ஸ், அம்மா, அப்பா என்று யாருடனாவது சண்டை போட்டிருந்தால், அந்தக் கவலையுடனேயே படிக்க உட்காராமல் சண்டை போட்டவர்களுடன் 'பழம்' விட்டுவிட்டு, மனக்குழப்பங்களுக்கு 'குட் பை' சொல்லிவிட்டுப் படிக்க உட்காருங்கள். இல்லையென்றால், நீங்கள் எத்தனை மணி நேரம் படித்தாலும் பாடம் மண்டையில் ஏறாது.

15. படிக்க உட்காரும் முன் பசியாக இருந்தால்... வயிறு நிரம்பச் சாப்பிடாமல், தேவையான அளவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல என அடிக்கடி எழுந்து போகமல் இருக்க முன்கூட்டியே இவை அனைத்தையும் செய்து முடியுங்கள்.

16. படிக்கும் பாடத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைவிட, ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டால் மனதில் ஆழமாகப் பதியும்.

17 படிக்கும்போது சிறு சிறு குறிப்புகளை நோட்ஸாக எடுத்துக் கொண்டால்... நிச்சயம் மறக்காது. உதாரணமாக, 'இந்திய நாடாளுமன்றம்' என்ற பாடப் பிரிவில் வரும் அத்தனை விஷயங்களையும் சிறு சிறு நோட்ஸாக எடுக்கும்போது, 'இந்தப் பிரிவில் 18 பாயின்ட்டுகள் வந்தன. 3-வது பாயின்ட் இது, 2-வது இது' என எதுவும் மறக்காது. ஒருவேளை மறந்தாலும் சீக்கிரம் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம்.

18. எல்லாப் பாடங்களிலும் உங்களுக்கு முந்தைய வருட கேள்வித் தாளை வாங்கிப் படித்தால், எந்த டாபிக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரியும்.

19. படிக்கும்போது முக்கியமான பாயின்ட்டுகளை கலர் பென்சில் அல்லது பேனாவால் கோடிட்டுக் கொண்டால் அது எப்போதும் மறக்கவே மறக்காது.

டென்ஷன் இல்லாமல் கிளம்பலாமே..!

20. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் லீவு முடித்து, திங்கட்கிழமை காலையில் 'ஒரு ஷ¨வைக் காணோம், சாக்ஸைக் காணோம்...' என்று டென்ஷனாவதைவிட, ஞாயிற்றுக்கிழமை இரவே அடுத்த நாள் அணிந்து செல்லும் ஷ¨, சாக்ஸ், டை, யூனிஃபார்ம், லஞ்ச் பேக், டவல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் நோ டென்ஷன்... நெவர் டென்ஷன்.

21. பள்ளி முடிந்து வந்ததும் காலி டிபன் பாக்ஸை பாத்திரம் கழுவப்போட வேண்டும். புத்தகப்பையை ஷெல்ஃப்பில்தான் வைக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பழக்கப்படுத்திக் கொண்டால், 'அதைக் காணோம்... இதைக் காணோம்' என்கிற கூச்சல் காணாமல் போய்விடும்.

22. ஸ்கூல் டைம்டேபிளை எழுதி, வீட்டில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துவிட்டால்... அன்றன்று உள்ள பீரியடுகளுக்கு ஏற்றபடி நோட், புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். தினமும் அனைத்துப் புத்தகங்களையும் 'பொதி' சுமக்கத் தேவையில்லை.

23. "நேத்தும் ஸ்கூலுக்கும் நான் லேட்... இன்னிக்கும் லேட்டா போகணுமா... சீக்கிரமா டிபன் பாக்ஸை கொடுங்க" என்று அம்மாவை அதட்டுவதற்குப் பதில், காலையில் எப்போதும் சரியான நேரத்துக்கு எழுந்து விடுங்கள். தலை வாருவது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பது, லஞ்ச் பாக்ஸ், டவலை எடுத்து வைத்துக் கொள்வது போன்ற சின்ன சின்ன வேலைகளை நீங்களே செய்துகொண்டால், அம்மாக்களுக்கு இன்னும் நேரம் மிச்சமாகும். சரியான நேரத்தில் உங்களை கிளப்பிவிடுவார்கள்.

24. சாக்ஸ், ரிப்பன் போன்றவற்றின் ஜோடி காணாமல் போகாமல் இருக்க, துவைத்துக் காய்ந்ததும் ஜோடியாக முடிச்சுப் போட்டு வைத்துவிடுங்கள். கடைசி நேரத்தில் தேடும் டென்ஷன் இருக்காது.

25. வீட்டை விட்டுக் கிளம்புமுன் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட், ஸ்போர்ட்ஸ் அயிட்டம், பென்சில், பேனா, எரேஸர், ஷார்ப்னர், ஸ்கேல், லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் இருக்கிறதா என்று ஒரு 'செக் லிஸ்ட்'டை மைண்டில் வைத்து செக் பண்ணுங்கள். எப்போதும் ஒரு ஸ்பேர் பேனா, பென்சில் செட் வைத்துக்கொள்வது டென்ஷனிலிருந்து விடுதலை கொடுக்கும்.

26. பள்ளி, கல்லூரிக்கு சைக்கிள் அல்லது டூ-வீலரில் செல்பவர்கள் டயரில் காற்று இருக்கிறதா, பஞ்சர் இல்லாமல் இருக்கிறதா என்பதை கடைசி நிமிடத்தில் பார்க்காமல் காலையிலேயே செக் பண்ணுவது உசிதம். வண்டி இப்போதைக்கு ரெடியாகாது என்று தெரிந்தால்... மாற்று வழிமுறை என்ன என்பதை உடனே முடிவு செய்யுங்கள். 'லேட்' என்ற டிஃபால்ட்டிலிருந்து தப்பிக்கலாம்.

கட்டாயம் வேண்டுமா டியூஷன்..?

காலை எழுந்ததும் மேத்ஸ் டியூஷன், ஈவினிங் சயின்ஸ் டியூஷன் என பள்ளிக்கு செல்வது போல் டியூஷன் செல்வதும் கட்டாயம் என்ற தோற்றம் உருவாகி உள்ளது. 'டியூஷன் அவசியமா?' என்று கேட்டால், 'இல்லவே இல்லை...' என்று சொல்லலாம், கீழே இருப்பவற்றைச் சரிவர பின்பற்றினால்...


27. பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே முழு கவனத்துடன் பாடத்தைக் கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். வீடு திரும்பியதும் அன்றைய தினமே அதை ஒருமுறை திருப்பிப் பார்த்து, அதில் உள்ள மெயின் ஹெட்டிங், சைட் ஹெட்டிங் பாயின்ட்டுகளை மனதுக்குள் குறித்துக் கொண்டால் போதும்.

28. அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தப் பாடத்தை முழுவதுமாகப் படித்து விட்டால், பரீட்சை நேரத்தில் ஜஸ்ட் ரிவிஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்கும்.

29. தினமும் காலையில் குறைந்தபட்சம் 1-2 மணி நேரமும், மாலையில் அதே அளவு நேரமும் படித்து விட்டால், 'எதற்கு டியூஷன்?' என்ற கேள்வி உங்களுக்கே தோன்றும். அதன் பிறகு 'டியூஷன் போனால்தான் நாம் படிக்க முடியும்' என்ற மாயை உங்களுக்கு 'டாட்டா' காட்டும்.

30. நீங்கள் ஒரு சப்ஜெக்டில் 'வீக்'காக இருக்கும் பட்சத்தில்தான் டியூஷன் செல்கிறீர்கள். டியூஷனில் அந்தப் பாடத்தை தெளிவு படுத்துவார்கள். அதே பாடத்தை பலமுறை எழுதி காண்பிக்கச் சொல்வார்கள். அதேபோல, உங்களுக்குச் சந்தேகமிருக்கும் பாடத்தை உங்கள் ஆசிரியரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம். வீட்டிலிருக்கும் அக்கா, அண்ணன், அம்மா, அப்பா என்று யாருடைய உதவியையாவது நாடலாம். இவர்களால் உங்களுக்கு முழுமையாக உதவ முடியாது என்ற போது டியூஷன் பற்றி யோசிக்கலாம்.

அதிக பணம் கொடுத்து வாங்கும் கைடு, நோட்ஸ் அவசியமா..?

பாடப் புத்தகம் ஐந்து என்றால், அதற்காகப் பயன்படுத்தும் கைடு ஆறாக இருக்கும். அதிலும் இந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர், அந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர் என்று கம்பெனிக்கு ஒன்றாக வாங்குவது அவசியமே இல்லை. காரணங்கள்...

31. பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களைத்தான் அப்படியே நோட்ஸில் கொடுக்கிறார்கள். அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான கைடில் பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்வியைவிட நான்கைந்து கேள்விகளை அவர்களே உருவாக்கி பதில் தந்திருப்பார்கள். பாட புத்தகத்தில் இருக்கும் கேள்விகள்தான் பள்ளித் தேர்வுகளில் அதிகம் இடம் பெறும் என்பதை உணருங்கள்.

32. ஒன் வேர்டு ஆன்ஸருக்காகத்தான் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 'கைடு' வாங்குகிறீர்கள். பாடத்தை ஒவ்வொரு லைனையும் பலமுறை வாசித்துவிட்டால்... எங்கிருந்து, எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஈஸியாக பதில் சொல்ல முடியும்.

33. டீடெய்ல்டு கொஸ்டினுக்கான ஆன்ஸர்களை பாடப் புத்தகத்தில் இருப்பதைவிட வார்த்தை சுருக்கி, குறைத்து கைடில் எழுதியிருப்பார்கள். இரண்டு, மூன்று வரிகள் குறைத்துத் தருவார்கள் என்பதற்காக கைடு வாங்குவது அநாவசியம். அந்தக் கேள்விகளை புத்தகத்தில் படிக்கும் போதுதான் எல்லா பாயின்ட்டுகளையும் முழுமையாக எழுதி, அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

34. ஆங்கிலம் இரண்டாவது தாளில் இடம் பெறும் 'கிராமர்' ஆசிரியர் நடத்திய உடனே பலருக்கும் புரிந்து விடாது. அதனை பலமுறை டிரயல் அண்டு எர்ரர் என்ற வகையில் எழுதிப் பார்த்தால்தான், 'Direct to Indirect Sentences', 'இதுதான் Past Participle Tense' என்றெல்லாம் தெளிவுக்கு வரும். அதற்காக பல முறை பிராக்டீஸ் செய்வது அவசியம் என்பதால், 'வொர்க் புக்' வாங்கி பயன்படுத்தலாம். இதுவும்கூட பயிற்சிக்காக என்ற அடிப்படையிலேயே சிபாரிசு செய்யலாம்!

பலவீனத்தை பலமாக மாற்றும் டெக்னிக்!

35. சிலருக்கு கணக்கு என்றால் பிணக்கு; அறிவியல் என்றால் அலர்ஜி; வரலாறு என்றால் வயிற்று வலி என்று அந்தப் பாடங்களின் மீது வெறுப்பு வரும். காரணம் கேட்டால்... 'நான் அந்த சப்ஜெக்ட்டில் வீக்' என்று ஒற்றை வரி பதில் வரும். ஒரு சப்ஜெக்ட்டில் வீக்காக இருக்க முதல் காரணம்... அந்த சப்ஜெக்ட் என்றாலே அது கஷ்டமாகத்தான் இருக்கும் என்ற உங்களின் முன்கூட்டிய தீர்மானம்தான் (pre-assumption). அந்த மாதிரி எண்ணங்களைத் தவிர்த்தல் அவசியம்.

36. ஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள வெறுப்பை பாடத்தில் காட்டினாலும் அந்த சப்ஜெக்ட்டில் வீக் ஆவது நிச்சயம். மனவெறுப்பை மாற்றுவதுதான் வளர்ச்சிக்கு வழி!

37 ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டில் ஏன் 'வீக்'காக இருக்கிறோம் என்பற்கான காரணங்களை நீங்களே அலசி ஆராய்ந்து, பிரச்னையைத் தீர்க்க வழி தேட வேண்டும்.

38. இயற்பியலில் வரும் கணக்குகளும், ஃபார்முலாவும் பிடிக்கவில்லை; புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் , உடனே அதை வெறுப்பது தவறு. அந்தக் கணக்கை ஒன்றுக்கு இரண்டுமுறை உட்கார்ந்து போட்டுப் பார்த்தால் இயற்பியலில் நீங்கள்தான் கிங்!

39. வரலாறு பாடங்களில் வரும் சம்பவங்களையும் வருடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிருக்கிறது என்றால்... அந்தப் பெயர்களையும் வருடங்களையும் கலர் ஸ்கெட்ச்சில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே ஒரு வரலாறு ஆவீர்கள்!

40. புவியியல் பாடங்களில் வரும் இடம், நாடு, அமைப்பு போன்றவற்றை ஒருவர் இன்னொருவரிடம் மாற்றி மாற்றி விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாம். ஈஸியாக நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் தோழியின் பெயரை அதனுடன் தொடர்பு படுத்தி வைத்துக் கொண்டால்... ஈஸி... ரொம்ப ஈஸி!

41. கணக்குப் பாடத்தில் ஒரு சேப்டர் முடிந்ததும் அதில் வரும் ஃபார்முலாக்களை நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டால், 'இந்த சேப்டரில் இத்தனை ஃபார்முலா' என்ற தெளிவு இருக்கும். சும்மா ரிலாக்ஸ்டாக இருக்கும்போது, அந்தப் பக்கத்தை அடிக்கடித் திருப்பிப் பாருங்கள். கணக்கு... வணக்கம் போடும் உங்களுக்கு.

42. இங்கிலீஷ், தமிழில் வரும் செய்யுளை மனப்பாடம் செய்து உடனே நோட்டில் எழுதிப் பார்த்து விடுங்கள்... அப்புறம் எந்த ரப்பர் வைத்து அழித்தாலும் அழியவே அழியாது!

43. இங்கிலீஷ் கிராமர் தகறாறு என்றால்... பன்னிரண்டு Tense- களையும் எழுதி, அதற்குக் கீழே உதாரணங்களையும் எழுதி வைத்து விடுங்கள். (எ.கா) Ramya is playing -Present continuous tense- மனத்தை விட்டு அகலாது, உதாரணமும், டென்ஸும்!

44. உயிரியல் பாடங்களில் வரும் படங்களை ஒருமுறைக்கு இரு முறை வரைந்து பாகங்களை குறித்து விடுங்கள். பரீட்சையில் அதற்கான பலன் கிடைக்கும்... நிறைய மதிப்பெண்களாக!

45. பொருளாதாரப் பாடங்களை ஒரு சினிமா கதைபோல் மனதுக்குள் ஓட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்துங்கள்.

46. அக்கவுன்ட்ஸ் கணக்கை நீங்களே ஒரு உதாரணத்தை உருவாக்கி மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். சி.ஏ. படிப்புக்கு உத்தரவாதம் ரெடி!

பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி..?

47. 'போர்டு எக்ஸாம்... பப்ளிக் எக்ஸாம்' என்றெல்லாம் பயங்காட்டும் பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள். 'பயம் தோல்வியின் முதல் படி; நம்பிக்கை வெற்றியின் அடித்தளம்' - இதை மறக்கவே மறக்காதீர்கள்! அந்த நம்பிக்கையோடு பரீட்சையை அணுகுங்கள்.

48. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ரெடியாகுபவர்கள் வருடத்தின் முதலிலேயே தெளிவான தீர்மானத்துக்கு வந்து விடுங்கள். ஒன்பதாம் வகுப்பில் எந்தெந்தப் பாடத்தில் நீங்கள் வீக்காக இருந்ததாக உணர்ந்தீர்களோ, அந்தப் பாடங்களுக்கு ஆரம்பத்திலிருந்து அதிக 'அட்டென்ஷன்' கொடுங்கள்.

49. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களுக்கு அதிக அட்டென்ஷன் தேவையில்லை என்ற கருத்தை மாற்றுங்கள். அந்தப் பாடங்களில் மார்க் குறைந்தால், மொத்த மார்க்கில் இடிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

50. இங்கிலீஷ் கிராமரில் தகறாரா? 'ஆக்டிவ் வாய்ஸ், பேஸிவ் வாய்ஸ் தெரியலையே' என்று எக்ஸாம் ஹாலில் சென்று விழிப்பதைத் தவிர்க்க, அது சம்பந்தமான எக்ஸர்சைஸ்களை வீட்டில் பலமுறை பிராக்டீஸ் செய்யுங்கள். 'பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பெர்ஃபெக்ட்!' தமிழ் இலக்கணத்துக்கும் அவ்வாறே..!

51. பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகளில் டிசம்பர் மாதத்திலேயே பாடங்களை முடித்து விடுவார்கள். அடுத்த மூன்று மாதங்களில் ஃபர்ஸ்ட் ரிவிஷன், செகண்ட் ரிவிஷன், தேர்ட் ரிவிஷன் எக்ஸாம் என்று உங்களை தயார்படுத்துவதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரிவிஷன் எக்ஸாம் என்பது பாதி பப்ளிக் எக்ஸாம் மாதிரி என்று நினைத்து செயல்பட்டால் அதிக மார்க் கியாரண்டி!

52. இந்தந்த கேள்விகள்தான் வரும் என்று குறித்து வைத்து படிப்பதைவிட எல்லாவற்றையும் படித்தால்... எக்ஸாம் ஹாலில், 'ஐயோ, நான் படிச்ச எஸ்ஸே வரலியே' என்று அலற வேண்டிய அவசியமில்லை.

53. அறிவியல் பாடங்களில் அல்வா மாதிரி மார்க்கை அள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சின்னச் சின்னக் கேள்விகளுக்கும் படங்களை வரைந்து பாகங்களை குறிக்க ஆரம்பத்திலேயே பழகிக் கொள்ள வேண்டும்.

54. டிசம்பர் மாதத்துக்குள்ளேயே பாடத்தில் இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியரிடமோ, நண்பர்களிடமோ தீர்த்துக் கொள்ளுங்கள். சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாமல் இருப்பது அந்தப் பாடத்தை பற்றிய அதிக குழப்பத்தைத் தரும்.

55. பல வருடக் கேள்வித்தாள்களை நண்பர்களிடமிருந்து கலெக்ட் செய்து, படியுங்கள். பாடத்தின் எந்தெந்த பகுதியிலிருந்து எந்தக் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது என்ற தெளிவு வரும்.

56. கணக்குப் பாடத்தில் வரும் எல்லா ஃபார்முலாக்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுமளவுக்கு மனப்பாடம் செய்வது அவசியம். பார்முலா தவறானால் மொத்தக் கணக்கும் தவறாகிவிடும் என்பதால் இதற்கு அதிக கவனம் வேண்டும்

57. முதல் ஆறுமாதங்களில் நடத்தப்படும் பாடங்களை ரிவிஷன் டெஸ்ட் நடத்தும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல், பாடம் நடத்திய 24 மணி நேரத்துக்குள் படித்துவிட்டால், மனதில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்ளும். வெற்றிக்கொடியை ஈஸியாக நாட்டலாம்.

58. வாழ்க்கையில் முக்கியமான பகுதி இந்த பப்ளிக் எக்ஸாம். இருந்தாலும், வாழ்க்கையே பரீட்சை கிடையாது. எனவே, அதைப்பற்றிய அவசியமான அக்கறை இருக்கட்டும். அநாவசிய பதற்றம் வேண்டாம்.

கல்லூரியில் சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

59. கல்லூரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக, நடுக்காட்டில் அமைந்திருந்தால்... அதைத் தவிர்ப்பது நல்லது. நல்ல சாலை, பஸ் போக்குவரத்தும், எளிதில் போய் வரக்கூடிய தொலைவிலும் கல்லூரி அமைந்திருக்கிறதா என்பதை நேரில் சென்று பார்த்து உறுதி செய்யுங்கள்.

60. 'கல்லூரி' என்ற பெயரில் கூரை வேய்ந்த கூடாரத்தில் கோழிப்பண்ணைகள் போல நிறைய கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆகையால், நல்ல கட்டட வசதியுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய காற்றோட்ட வசதி, நூலகம், ஆய்வகம் எல்லாம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

61. பெண்களும் ஆண்களும் இணைந்து படிக்கும் கல்லூரி எனில் கழிப்பறை வசதி பாதுப்பானதா, போதிய தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அவசியம் கண்காணியுங்கள்.

62. கல்லூரியில் பணியாற்றும் லெக்சரர்களுக்கு குறைந்தபட்ச அனுபவம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

63. சில தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க முடியாமல் லெக்சரர்கள் திடீரென ராஜினாமா செய்துவிட்டுப் போவதால் பல மாதங்களுக்கு லெக்சரர் இல்லாமலேயே பாடம் படிக்கிறார்கள் மாணவர்கள். எனவே, கவனம் அவசியம்.

64. கல்லூரியின் கல்வித் தரத்தை தெரிந்து கொள்ள, பல்கலைக்கழகத் தேர்வில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி விகிதத்தை அந்தக் கல்லூரி பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

65. ஹாஸ்டல் எனில்... பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு உள்ளதா, எத்தனை வார்டன்கள், இரவு நேர காப்பாளர்கள் எத்தனை பேர் உள்ளனர், அருகில் மருத்துவமனை உள்ளதா, சாப்பாடு தரமானதா, தண்ணீர், கழிப்பிட வசதி, ஹாஸ்டலுக்குள் இருக்கும் விதிமுறைகள் ஆகியவற்றை கட்டாயம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின் பிறகு சேருங்கள்.

66. கல்லூரியில் 'ராகிங்' கலாட்டா இருக்கிறதா, இதற்கு முன்பு ஏதேனும் கடுமையான சண்டைகள், பிரச்னைகள் நடந்துள்ளதா என்பதை அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

67. கல்லூரியில் சேரும் முன்பே கல்விக் கட்டணம் மொத்தமாக எவ்வளவு வரும் என்பதை தெளிவாக விசாரியுங்கள். பிறகு, மாதம் மாதம் ஒரு ஃபீஸ் என்று தொல்லை தரமாட்டார்கள்தானே என்பதையும் உறுதி செய்யுங்கள்.

68. கல்லூரி வாகனங்களில்தான் செல்ல வேண்டும் என்றால், அந்த வாகனத்தின் கண்டிஷன், அனுபவமுள்ள டிரைவர்தான் ஓட்டுகிறாரா என்பதை நிச்சயம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

69. பொறியியல் கல்லூரிகள் எனில், அங்கு தரமான நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கான வாய்ப்புகள் உள்ளனவா... அவையும் திருப்திகரமானவையா என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்திய அளவில் எழுதப்படும் தேர்வுகள்!

70. நம் நாட்டில் ஐ.ஐ.டி.(IIT) நிறுவனங்கள் மொத்தம் 15 உள்ளன. இவற்றில் சேர, JEE எனும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கான அப்ளிகேஷன், வங்கிகளில் கிடைக்கும். IIT வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம். ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில்தான் இதற்கான விண்ணப்பங்கள், தேர்வு உள்ளிட்ட நடைமுறைகள் ஆரம்பமாகும். தேதி மட்டும் மாற்றத்துக்குட்பட்டது.

பரீட்சை தேதி: ஏப்ரல் 2010, இரண்டாவது வாரம்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் நாட்கள்: நவம்பர் 2009, மூன்றாவது வாரத்திலிருந்து.

விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள்: டிசம்பர் 2009, மூன்றாவது வாரம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: டிசம்பர் இறுதி வாரம் 2009.

ரிசல்ட் அறிவிக்கும் நாள்: மே கடைசி வாரம் 2010.

தேர்வு: மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். அப்ஜெக்டிவ் டைப்பில் இரண்டு பாடங்களில் கேள்வித்தாள் இருக்கும். கேள்வித்தாளில் இடம் பெறும் பாடப்பிரிவுகள் இயற்பியல், வேதியியல், கணக்கு.

அதிக விவரங்களுக்கு www.jee.iitd.ac.in www.entrance_exam.net

71. டெல்லியிலிருக்கும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) நிறுவனம் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. ப்ளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். தேர்வுகளும், இந்த ஆண்டு அவை நடைபெறும் நாட்களும் கீழே இடம்பெறுகின்றன (ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நாட்கள் மாற்றத்துக்குரியது). மேலும் அதிக விவரங்களுக்கு: எக்ஸாமினேஷன் செக்ஷன், ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், அன்சாரி நகர், புதுடெல்லி 110029.

தொலைபேசி: 011-26588580, 26588700.

72. ஐந்தாண்டு படிப்பான எம்.பி.பி.எஸ்ஸை இங்கே படிப்பவர்களுக்கு உலக அளவில் நல்ல மரியாதை உண்டு. இதில் இடம் கிடைப்பதென்பது ஏகபோராட்டம்தான். திறமையோடு முட்டி மோதினால் வெற்றி நிச்சயம். தகுதியான வேலை, தரமான சம்பளம் என்று வலம் வரலாம். தேர்வு நாள்: 01-06-2010. முடிவு அறிவிக்கப்படும் நாள்: 15-7-2010

73. மூன்று ஆண்டு படிப்பான பி.எஸ்சி. பாராமெடிக்கல் கோர்ஸில் லேப் டெக் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள் சொல்லித்தரப்படுகின்றன. எம்.பி.பி.எஸ். போலவே எய்ம்ஸின் (AIIMS) இந்தப் படிப்புக்கும் உலகளாவிய மரியாதைதான். தேர்வு நாள்: 5-6-2010.

74. மூன்றாண்டு படிப்பான பி.எஸ்சி. நர்ஸிங்கை எய்ம்ஸில் (AIIMS) முடிப்பதே கௌரவமான விஷயமாக பலராலும் பார்க்கப்படுகிறது. இதற்கும் நல்ல வரவேற்பு உண்டு. தேர்வு நாள்: 13-6-2010. முடிவு அறிவிப்பு நாள்: 23-6-2010.

75. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான 'காமன் லா அட்மிஷன் டெஸ்ட்' (CLAT), மே மாதம் நடைபெறுகிறது. 1,500 சீட், ஐந்தாண்டு படிப்பான பி.ஏ.எல்.எல்.பி-க்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விநியோகிக்கப்படும். பெங்களூரு, ஹைதரபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்திபூர், லக்னோ, பட்டியலா, பாட்னா, கொச்சியில் இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

எதிர்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கும் படிப்புகள்..!

இன்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதால் வீட்டுக்கு ஒரு இன்ஜினீயரை உருவாக்கினார்கள். இன்று இன்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டுமே லட்சங்களில் நீள்கிறது. அதேபோல்தான் ஐ.டி. துறையும். இதையெல்லாம் பார்த்துக் குழம்பிப் போய் இருப்பவர்கள், 'எதைப் படித்தால் வேலை நிச்சயம்...?' என்ற கேள்வியோடு காத்திருப்பவர்கள்... இனி வரும் டிப்ஸ்களை கவனமாக படியுங்கள்.

76. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப் பெரிய மாறுதல்களை காணப்போகிறது. அதனால் சமூகம், உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் தலைதூக்கும். அந்த பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் படிப்புகளை படித்தவர்கள்தான் அப்போதைய மில்லியனர்கள்.

77. உலகில் அரசியல், சமூகம், பொருளாதாரம் சுற்றுச்சூழல் ஆகிய 4 முக்கிய காரணிகளின் அடிநாதமே பிரச்னைக்கு உள்ளாகும். அந்தக் காலகட்டத்தில் 'சமூக அறிவியல்' தொடர்பான எம்.எஸ்.டபில்யூ. (MSW-Master of Social Work) படித்தவர்களின் எதிர்காலம் மிக பிரகாசமாகும்.

78. ஐ.டி. துறையில் ஏற்பட்ட தடுமாற்றம் போல் வரும் காலத்தில் பல துறைகளிலும் புயல் அடிக்கும். இதனால், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கப் போவது சமூக மனநலம், தனிநபர் மனநலம் சார்ந்த பிரச்னைகளே. அந்த சூழ்நிலையில் Sociology, Psychology, Anthropology, Social Work போன்ற படிப்புகள் பணம் தரும் கற்பகத் தரு!

79. எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இயல்பான சமூக வாழ்க்கை நீண்டாலும், பில்கேட்ஸ் துறையில் பணம் கொட்டினாலும் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக வேலை வாய்ப்பினை பெறுபவர்கள்... சமூக அறிவியல் துறை சார்ந்தவர்களே! காரணம் அனைத்து முன்னணி நிறுவனங்களில் Corporate Social responsibility என்ற ஒரு துறை பெரிய அளவில் இயங்கி வருவதே!

80. பணம் பெருகினாலும், வற்றினாலும் தனிமனித மகிழ்ச்சி, குடும்ப சந்தோஷத்தில் குழப்பம், உறவுகளில் பிரிவு என்று பிரச்னைகள் பிரமாண்டமாக உருவெடுக்கும். ஆகையால், குடும்ப நல ஆலோசகர்கள் - கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கு திடமான எதிர்காலம் உள்ளது.

81. டெக்னாலஜியால் ஏற்படும் விளைவு காரணமாக சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.

82. சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உணவகம், கைடு சர்வீஸ், போக்குவரத்து சேவை படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

83. எப்போதும் வாய்ப்பிருக்கும் படிப்புகள்; கல்வி தொடர்புடைய மொழி பெயர்ப்பாளர், ஆசிரியர் மருத்துவத் துறையினர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதானதாக இருக்கும்.

திறந்த நிலை (Open Universities), தொலைதூரம் (Distance Education) ... தெளிவுக்கு சில துளிகள்

84. திறந்த நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 14 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் டெல்லியிலுள்ள இந்திய தொலைதூரக் கல்வி கவுன்சிலால் ரெகுலேட் செய்யப்படுகின்றன.

85. இதன் நோக்கம் இந்திய மக்கள் அனைவருக்கும் உயர்கல்வி கொடுப்பதே.

86. திறந்த நிலை கல்வியில் இந்திரா காந்தி ஓபன் யுனிவர்சிட்டிக்கு பெரிய நிறுவனங்களில் மதிப்பு உண்டு.

87. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 15 முதுநிலை பட்டப் படிப்பும் 17 இளநிலை பட்டப் படிப்பும், 5 டிப்ளமோ படிப்பும், 7 சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் அளிக்கப்படுகின்றன.

88. குறைந்தபட்சம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியவர்கள், 18 வயது நிரம்பியிருந்தால் இங்கு விண்ணப்பித்து சேரலாம்.

89. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தால் அரசு வேலை வாய்ப்பு பெற இயலாது.

90. சூழ்நிலை காரணமாக ரெகுலர் கல்லூரிக்கு செல்ல முடியாதவர்கள், பள்ளி இறுதிப் படிப்பை முடித்தவர்கள் தொலைதூரப் பல்கலைக்கழகத்தில் சேரலாம்.

91. தொலை தூர பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், முதுநிலை பட்டப்படிப்புக்கு ரெகுலர் காலேஜில் சேரத் தகுதியுடையவர். இதுவே திறந்த நிலை கல்வியில் படித்தவர்களால் சேர முடியாது.

92. தொலை தூர கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்கள், அடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

93. தொலை தூர கல்வி பட்டப்படிப்பும், பட்டயப் படிப்பும் அரசு வேலையில் சேரத் தகுதியுடையவை.

94. ஒரே சமயத்தில் இரண்டு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரெகுலர் காலேஜிலும், தொலை தூரக் கல்வி பல்கலைக்கழகத்திலும் படித்தால்... ஏதேனும் ஒரு பட்டம் மட்டுமே செல்லும்.

95. ஒரு பட்டத்தை தொலை தூரக் கல்வியிலும் இன்னொன்றை திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தால் இரண்டுமே செல்லும். ஆனால், திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டம் வேலை வாய்ப்புக்கு உதவாது.

கல்வி... சில தகவல்கள்!

96. வேத காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் படித்திருக்கிறார்கள். அதற்கு பிற்பட்ட இடைக்காலத்தில் பெண் கல்வி சுருங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் மீண்டும் உயிர் பெற்றது.

97. 1971-ல் 22% பெண்களே கல்வி கற்றிருந்தனர். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 54.16% பெண்கள் கல்வி கற்றுள்ளனர்.

98. உயர் கல்விக்காக இந்தியாவில் தற்போது மொத்தம் அரசு அங்கீகரித்த 227 யுனிவர்சிட்டிகள் உள்ளன.

99. இந்திய அரசின் உயர் கல்வித் துறையின் தகவலின்படி இந்தியாவில் 16,885 கல்லூரிகளும், அதில் 99.54 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். இத்தனை மாணவர்களுக்கு 4.57 லட்சம் பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள்.

100. டெக்னாலஜியின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று ஆன் லைனிலும் பல படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. உலக மொழிகளைக் கற்றுத் தரும்படிப்புதான் முன்னணியில் உள்ளது.

*****

தொகுப்பு: நாச்சியாள், இரா.மன்னர் மன்னன்
படங்கள்: எம்.உசேன், வி.செந்தில்குமார், து.மாரியப்பன்
தொகுப்புக்கு உதவியவர்கள்:
டாக்டர் ஜா.மா.அருள்காமராஜ்,
எஜுகேஷன் கன்சல்டன்ட்
அகிலா, பள்ளி ஆசிரியை
கலா, பள்ளி ஆசிரியை

மூலம் : அவள் விகடன்

Wednesday, December 23, 2009

jokes

நீ சிங்கமா?


'எஸ்.எம்.எஸ்.' வார்த்தைக்கு ஒரிஜினல் அர்த்தம் தெரியுமா?

S - Singam அனுப்ப
M - Monkey படிக்கும்
S - Smaal ஸ்டோரி
என்ன மொறப்பு... யாருக்காவது அனுப்பி நீயும் சிங்கமாயிடு!

- க.சரவணன்

******************************************

தவமாய் தவமிருந்து...

"உன் பையன் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி என்ன சொல்லிட்டுப் போறான்?"

" 'நல்லா படிச்சாதான் நல்ல காலேஜ்ல சீட்டு கிடைக்கும். ஒழுங்கா படிடான்'ன்னு சொன்னேன். 'டொனேஷன் கொடுத்தா எந்த காலேஜ்லயும் சீட்டு கிடைக்கும். ஒழுங்கா சம்பாதிச்சு பணத்தை சேர்த்துவையுங்க'ன்னு சொல்லிடுப் போறான்.

எஸ்.கருணாகரன்

******************************************

புரொஃபசர் : "மத்தவங்களுக்கு புரியாத மாதிரி பேசுறவன் முட்டாள்!"
மாணவன் : "எனக்கு ஒண்ணும் புரியல சார்!"

- ஜோ.ஜெயக்குமார்.

******************************************

நட்பூ!

விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல; பரீட்சை ஹாலில் பிட்டு கொடுப்பதும், மாட்டிக் கொண்டாலோ... ஃபெயில் ஆனாலோ... தட்டிக் கொடுப்பதும் நட்பு!

- க.சரவணன்

******************************************

டு... தடு... உதடு!

அவள் கண்கள் பேசிய வார்த்தைகள் புரிந்த எனக்கு...
அவள் உதடு பேசிய வார்த்தைகள் புரியவில்லை.
பயபுள்ள மூச்சுவிடாம பேசுது இங்கிலீஷ்ல!

- எம்.தமிழரசு

******************************************

செமஸ்டர் டிப்ஸ்!

கொஸ்டீன் பேப்பர் ரொம்ப டஃப்பா இருக்கா? ஒரு கேள்விக்கும் பதில் தெரியலயா? கவலைப்படாதீங்க. கைவசம் ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. கண்ணை மூடி மூச்சை இழுத்துவிட்டு சத்தமா சொல்லுங்க, 'மாப்பு... வெச்சிட்டாண்டா ஆப்பு'!


- எஸ்.ஏ.ஸ்வாதி பிரியா

******************************************

'சேவிங்'ஸ்!

பஸ்ல போனா காசை சேவ் பண்ணலாம். ஆட்டோவுல போனா நேரத்தை சேவ் பண்ணலாம். ஆனா, ஒரு பொண்ணு பின்னாடி போனா... தாடியைக் கூட சேவ் பண்ண முடியாது!

- ஞா.அண்ணாமலை ராஜா

******************************************

யோசிங்கப்பா!

'ஆண்டவா காப்பாத்து'
மனதார வேண்டிவிட்டு
ஆண்டவனைக் காப்பாத்த
கோயிலுக்கு வெளியே
போடுகிறோம் பூட்டு!'

- எம்.பத்மாவதி

*******************************************

இது நியாயமா?

கஷ்டப்பட்டு மூளையை கசக்கி
எக்ஸாம் எழுதுற ஸ்டூடந்த்ஸுக்கு
எக்ஸாம் ஹால்ல வெறும் தண்ணி மட்டும்தான் தர்றாங்க.
பசங்க எழுதுறதை வெட்டியா வேடிக்கை பாக்குற
புரொஃபசர்களுக்கு காபி, டீ, பிஸ்கட் கொடுக்குறாங்க.
என்ன கொடுமை சார் இது?

குட்நைட்!

இவர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...

விஜய் : "ண்ணா.. குட்நைட்ங்ணா!"
அஜீத் : "எல குட்நைட்ல!"
சிம்பு : "மச்சி... குட்நைட் மச்சி!"
சூர்யா : "ஹாய் மாலினி குட்நைட்!"
சசிகுமார் : "மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா!"

டீன் - ஏஜ் ஸ்பெஷல்..!

மனித வாழ்க்கையில் பல பருவங்கள் உண்டு. டீன்-ஏஜ்... அவற்றுள் பரவசமானது!

இந்தப் பருவ வயதில் உடல், மன ரீதியாக நடைபெறும் பல்வேறு மாற்றங்களில் முக்கியமானது, 'தனித்தன்மை' உருவாவது! அவரவரின் கேரக்டரைத் தீர்மானிக்கும் அந்த 'தனித்தன்மை'... அழுத்தங்கள், ஏக்கங்கள், போராட்டங்கள், கவர்ச்சிகள் என்று பலவிதமான படிக்கற்களையும் கடந்து அடைய வேண்டிய முக்கிய நிலை! அதற்கான கனிவான, கவனமான வழிகாட்டல்தான்... இந்த இணைப்பு!


மொத்தத்தையும் நீங்கள் படித்து முடிப்பதோடு, மறக்காமல் படிக்கக் கொடுங்கள்... உங்கள் வீட்டு ஸ்வீட் டீன்களிடம்!

ரொம்ப 'ஷை'யா ஃபீல் பண்றீங்களா?

1. முன்னேற்றத்தின் எதிரிகளில் முக்கியமானது, இந்தக் கூச்சம்! இந்தப் பருவத்தில் மற்றவர்களிடம் சகஜமாக பேச முடியாதபடி ஒரு கூச்சம், தயக்கம் எழும். அதை வளரவிடாமல், அப்போதே களைய வேண்டியது அவசியம். முதலில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர்களுடன் பேசிப் பழக ஆரம்பியுங்கள். குறிப்பாக, கண்களைப் பார்த்துப் பேசுவது, கேள்விகள் கேட்பது, பயப்படாமல் பதில் சொல்வது என ஆரம்பியுங்கள். பின் அந்த வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையச் செய்யுங்கள்.

2. தயக்கத்துக்கான முக்கிய காரணமே, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் எண்ணம்தான். அடுத்தவர்களின் நினைப்பை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். தைரியம்தான் முக்கியம். விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல் பேசுங்கள்.

3. சிலருக்கு எப்படி பேச்சைத் துவங்குவது என்பது தெரியாது. முதல் வாக்கியத்துக்கே சிரமப்படாமல், ''ஹாய்... எப்படி இருந்தது உங்க டிராவல்..?'', ''புது டிரெஸ்ஸா... நைஸ்!'' - இதுபோல இயல்பாக ஆரம்பிக்கலாம்.

4. உரையாடலின் முடிவில் ஒரு கேள்வியை வையுங்கள். அப்போது அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் தயக்கங்களும் விலகும்.

5. கல்லூரி மேடையில், கிளாஸ் செமினாரில் என்று ஒரு கூட்டத்துக்கு முன் பேச கூச்சம் அப்பிக்கொள்கிறதா? அதற்காக முன்கூட்டியே பயிற்சி எடுங்கள். கண்ணாடி முன் நின்று சத்தமாகப் பேசிப் பழகுவது ஒரு நல்ல வழி. நன்றாகப் பயிற்சி எடுத்த பின், அங்கு தைரியமாக, தயங்காமல் பேசுங்கள். அப்படியும் தப்பு வரலாம்... தப்பில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவைஎல்லாம் தானாக மறைந்து விடும்.

6. ஆன்மிகம், பொதுநல சேவை, யோகா, தியானம் என ஏதாவது ஒரு சமூக குழுவில் இணையுங்கள். அவை நல்ல குழுக்களாக இருக்கட்டும். அந்தக் குழு விஷயங்களில், ஆலோசனைகளில், கூட்டங்களில் பங்கெடுங்கள்... பேசுங்கள். எந்தக் குழுவில் இணைந்தாலும் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு இணைவது நல்லது.

7. நிறைய படிப்பது, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, நீங்கள் பேசுவதற்கான கருப்பொருள் கொடுக்கும். நண்பர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே, ''ஆமா... இப்படித்தான் ஜப்பான் பிரதமர்கூட...'' என்று ஆரம்பித்து கலக்கலாம்!

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

8. உங்களுக்கான லட்சியம் ஒன்றை உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.

9. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த எதையும் செய்ய ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்குச் சரி எனப்படுவது சரியாக இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். தவறு என உணர்ந்தால் நிறுத்துங்கள். எல்லோரும் படகு வாங்குகிறார்கள் என்று படகு வாங்கி ரோட்டில் நிறுத்துவது பயனளிக்காது.


10. 'தம் அடிப்பதை நிறுத்த வேண்டும்' என பிடிவாதமாக முயன்றாலும், முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் முயற்சியில் தொடர்ந்து பிடிவாதமாக, நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி உங்களுக்கே!

11. உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். 'நான் குட்!' என்று உங்களுக்கு நீங்களே மரியாதை செய்யுங்கள். நல்ல திருத்தமான ஆடைகள் அணியுங்கள். இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

12. எதை நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள். எனவே, உங்களுடைய இயலாமைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துங்கள். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களைச் சிந்தியுங்கள்.

13. தவறுகள், தோல்விகள்... இவற்றையெல்லாம் அனுபவங்களாகக் கொள்ளுங்கள். தவறே செய்யாமலும், தோல்வியே இல்லாமலும் யாரும் இல்லை என்பதை உணருங்கள். 'இட்ஸ் ஆல் இன் த கேம்...' என்று அவற்றை அந்த நிமிடமே உதறிவிட்டு, அடுத்த வேலையை ஆரம்பியுங்கள்.

14. 'நான் ஸ்லிம்மா இல்லையே...', 'எனக்கு லாங் ஹேர் இல்லையே...' போன்ற உங்களின் பர்சனாலிட்டி பற்றிய நெகட்டிவ் எண்ணங்களைத் தூக்கி தூரப் போடுங்கள். 'அழகு என்பது முகம் அல்ல... அகம்' என்பதை உணருங்கள்! மனதளவில் அழகி, அழகனாகுங்கள்!

15. உங்களுக்குத் திறமை, ஆர்வம் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து அதை டெவலப் செய்யுங்கள். அப்போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் அசாத்திய பலம் தெரிய வரலாம். இது உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரும்.

16. வகுப்பறை, நண்பர் கூட்டம், குழுக்கள் என்று எங்கேயானாலும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது, உங்கள் கருத்தைச் சொல்வது. கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லாவிட்டாலும் கவலையில்லை, 'நம் கருத்தைச் சொல்லும் தைரியம் நமக்கு இருந்தது' என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

கோபத்தைக்கட்டுப்படுத்த..!

17. டீன்-ஏஜ் உணர்ச்சிபூர்வமான வயது. அடிக்கடி கோபம் வருவது இயற்கை. கோபத்தால் பெற்றோருடனோ, மற்றோருடனோ சண்டைகள் போடுவதற்கு முன்... அந்த கோபத்துக் கான உங்கள் காரணம் நியாயமானதுதானா என்று நிமிட நேரம் சிந்தியுங்கள். அப்படியே நியாயமாக இருந் தாலும், அதை 'இந்த இடத்தில் காட்டுவதால் என்ன லாபம்?' என யோசியுங்கள்.

18. கோபத்தை நீங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் சிக்கல்கள் பல விலகும். கோபம் உங்களைக் கட்டுப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும்.

19. உங்களைக் கோபப்படுத்தும் சூழல் உருவானால் சில நிமிடங்கள் அமைதியாக இருங்கள். உங்களுக்குள்ளேயே சில கேள்விகளைக் கேளுங்கள். இந்தச் சூழலில் எப்படியெல்லாம் செயல்படலாம் என்பது உங்களுக்குப் புரியவரும். நல்ல வழியை முடிவு செய்யுங்கள். இந்த சில நிமிட இடைவெளி பல அதிசய மாற்றங்களைத் தரும்.

20. கோபப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள். விளைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதையும் கண நேரம் யோசியுங்கள். நீங்கள் சரியான முடிவை எடுக்க இது உதவும்.

21. நீங்கள் கோபப்பட்ட சூழல்களையும், அதில் நீங்கள் செய்தவற்றையும் ரீவைண்ட் செய்து பாருங்கள். உங்களுக்குப் பல பாடங்கள் புரியும்.

22. கோபத்தின் எதிரி இசை. நல்ல இசை கேட்டால் கோபம் ஓடியே போய்விடும். தினமும் சிறிது நேரம் இசைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. கூடவே, கோபம் எனும் அந்தச் சக்தியை ஆக்கபூர்வமாக கலைகளில் ஈடுபடுத்தி சமன் செய்யுங்கள்.

23. உங்கள் கோபங்கள், எரிச்சல்கள் எல்லாவற்றையும் எழுதி வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைக்கும்.

எக்ஸாம் ஃபீவரை எளிதில் துரத்தலாம்!

24. பயத்தை விரட்ட எளிய வழி, பயத்தை எதிர்கொள்வதுதான். எந்த விஷயத்துக்காகப் பயப்படுகிறீர்களோ அதை தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

25. பயத்தை எதிர்கொள்ள சரியான தயாரிப்புகள் வேண்டுமல்லவா? ஆக, தேர்வு பயத்தை விரட்ட நன்றாகப் படித்து விடுங்கள். வேறு வழியே இல்லை.

26. தேர்வுக்கு முந்தைய நிமிடங்களில் ரிலாக்ஸ்டாக இருங்கள். அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வேகவேகமாக பக்கங்களை உருட்டினால், அவர்கள் ஒப்பிக்கும் விஷயங்களை 'ஐயோ, இதெல்லாம் எங்கே இருக்கு?!' என்று பதறித் தேட ஆரம்பிப்பீர்கள். பின் படித்ததெல்லாம் அம்போதான்.


27. பரீட்சைக்கு முன்பே 'ஒருவேளை நான் ஃபெயில் ஆயிட்டா..?' என்று தேவையில்லாமல் நெகட்டிவாக நினைத்து பயப்படுவதை நிறுத்துங்கள். பரீட்சைத் தாளை நம்பிக்கையுடன் கட்டிக்கொடுங்கள்.

28. மதிப்பெண்கள், நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் தரப்படுவதுதான். எனவே, படிக்காதவற்றை நினைத்து பதற்றப்படாமல், படித்தவற்றை நன்றாக எழுதுங்கள்.

29. தேர்வுக் காலங்களில் உடற்பயிற்சி, நல்ல உணவு, சுத்தமான காற்று இவையெல்லாம் முக்கியம். 'பரீட்சை... பரீட்சை' என சீக்கு வந்த கோழி போல அறைக்குள்ளேயே அடைபட்டு கிடக்காமல், இயல்பாக இருங்கள்.

30. 'படிக்காமலேயே பாஸாகணுமா? படிச்சதெல்லாம் நினைவில் நிற்கணுமா?' என்றெல்லாம் கூவிக் கூவி விற்கும் மருந்துகள் பக்கமெல்லாம் பார்வையைக் கூட திருப்பாதீர்கள்.

31. தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். அடுத்த நாள் சுறுசுறுப்பாக தேர்வு எழுத இது உதவும். தேர்வுக்கு சீக்கிரமாகவே கிளம்பி விடுங்கள். கால், அரை மணி நேரம் முன்பாகவே பள்ளி வளாகத்தில் காத்திருப்பது தப்பில்லை. டிராஃபிக், பஸ் பிரேக்டவுன் என எதிர் பாராத சிக்கலில் மாட்டி, எக்ஸாம் ஹாலுக்கு நொடிகள் லேட்டாக போனா லும், அந்த டென்ஷனிலேயே படித்ததில் பாதி மறந்து போய்விடும்.

32. தேர்வு எழுதும்போது அடுத்தவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் எட்டிப் பார்க்காதீர்கள். 'ஆஹா... எல்லோரும் நாலாவது கேள்வி எழுதறாங்களே, நான் ரெண்டாவதுதானே எழுதுறேன்', 'ஐயோ, நான் இன்னும் அடிஷனல் ஷீட் வாங்கலையே... எல்லோரும் வாங்கிட்டாங்களே' போன்ற பதற்றங்களெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள்.

33. ஒரு தேர்வு எழுதும்போது அதில் மட்டும் கவனம் இருக்கட்டும். அடுத்த பாடத்துக்கான திட்டமிடுதலோ, அதைப் பற்றிய கவலையோ தேவையில்லை. 'ஐயோ, நாளைக்கு மேத்ஸ்...' என கவலைப்பட்டால்... இன்றைய சயின்ஸ் பாடமும் காலி!

நல்ல நட்பைத் தேர்ந்தெடுங்கள்!

34. பெரும்பாலும், பருவ வயதில் நமக்கு அமையும் நண்பர்கள்/தோழிகள்தான் நம் ஆத்ம நண்பர்களாகி, இறுதி வரை வருவார்கள். எனவே, இப்போது தேர்ந்தெடுக்கும் நட்பில் இருக்கிறது நமது வாழ்க்கை. படிப்பு, கலாட்டா என அனைத்திலும் ஆர்வமுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் ஸ்மோக், ட்ரிங்க், டேட்டிங் என்று தீய வழிக்கு இழுக்கும் நண்பர்கள் பக்கம் ஒதுங்கவே ஒதுங்காதீர்கள். விளையாட்டாக ஆரம்பித்து வினையில் முடியும் சமாசாரங்கள் இவை!

35. நல்ல தோழியைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் நிலவினாலும் பரவாயில்லை... பொறுமையாக தேர்ந்தெடுங்கள். ஒரு நல்ல தோழி கிடைத்தால் அவர் மூலம் மேலும் பல நல்ல தோழிகள் கிடைப்பார்கள்.

36. நண்பர்கள் உற்சாகமானவர்களாக இருந்தால்தான், அந்த உற்சாகம் உங்களையும் வந்தடைந்து உற்சாகமாக இயங்க வைக்கும். ''பேப்பர் பிரசன்டேஷனா..? அதெல்லாம் நம்மளால முடியாதுடி'', ''உன்னால மேடையில பயமில்லாம நின்னுட முடியுமா..?'' என்றெல்லாம் பேசி, தங்களுக்கும் தன்னம்பிக்கை இல்லாமல், நம் நம்பிக்கையையும் குலைக்கப் பார்க்கும் நண்பர்களை கழித்துக் கட்டுங்கள்.


37. சிலருக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள், சிலருக்கு சில தோழிகளே இருப்பார்கள். ஒரு நல்ல தோழிகூட போதும்... வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய. எனவே, தோழிகளின் எண்ணிக்கை குறித்த கவலை வேண்டாம்.

38. உங்கள் நண்பர்கள் உங்களிடம் எப்படியெல்லாம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த அன்பை முதலில் நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள். தப்பு செய்தால் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்க வேண்டாம். குறிப்பாக, ஈகோ எனும் வார்த்தையே நட்பில் இருக்கக் கூடாது.

39. நட்பில் 'நம்பிக்கை' மிக முக்கியம். அதை எந்தச் சூழ்நிலையிலும் உடைக்காதீர்கள். உங்கள் தோழி ஒரு ரகசியம் சொன்னால், அதை ரகசியமாகவே வையுங்கள். ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுங்கள். தோழியிடம் உண்மையை மட்டுமே பேசுங்கள்.

40. தோழிக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உதவத் தயங்காதீர்கள். அதற்காக சில கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதும் தப்பில்லை. துணையாகத் தோள் கொடுப்பதும்தான் நட்பின் முக்கிய இலக்கணம். அது நட்பின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கும்.

41. நண்பர்கள் இடையேயான ஆத்மார்த்த உரையாடல்கள் அவ்வப்போது நடக்கட்டும். மன அழுத்தம், கோபம், எரிச்சல் போன்றவற்றைஎல்லாம் அது வீசி எறிந்துவிடும்.

42. உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படாமல் ஆனந்தமடைபவரும், உங்களைப் பற்றி தப்பாக கிசுகிசுக்காதவருமே உங்களின் உண்மையான நண்பர்!

43. பழைய, பால்ய நண்பர் களுடனும் தொடர்பில் இருங்கள். பழைய நட்புகள் வேர்கள் போல. எப்போதும் நமக்குள் வியாபித்திருக்கட்டும்.

இதெல்லாம் மன அழுத்த சிம்ப்டம்ஸ்!

44. மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?

45. உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா... நண்பர்களின் உற்சாக அரட்டை சலனப்படுத்தவில்லையா... சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத் தோன்றவில்லையா?

46. உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? 'நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன், என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?' என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?

47. திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?

48. அவ்வப்போது அழுகை வருகிறதா... யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட அழுகையை மேலும் கிளறுகிறதா... சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று தோன்றுகிறதா?

49. திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா... அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?

50. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா... ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா... படிப்பு எல்லாம் 'சர்'ரென கீழே இறங்குகிறதா?

51. 'யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை' என தோன்றுகிறதா... 'என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது' என்று தோன்றுகிறதா?

52. தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?

53. மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?

- மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள். பதற வேண்டாம். வழி இருக்கிறது. வாழ்க்கை அழகானது! மேலே படியுங்கள்!

'ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!

54. 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், பெற்றோரிடம் உங்களின் நிலையை விளக்கிவிடுவதுதான்.

ஆத்மார்த்த நேசம் கொண்டவர்களுடனான உரையாடல், மன அழுத்தங்களை விலக்கிவிடும். 'அம்மா, அப்பா என்ன நினைப்பாங்க..? புரிஞ்சுப்பாங்களா..?' என்றெல்லாம் யோசித்துக் குழம்பாதீர்கள். உலகிலேயே நீங்கள் அதிகம் நம்ப வேண்டிய இரண்டு பேர்... உங்கள் பெற்றோர்தான்.

55. அதேசமயம், பெற்றோர் சண் டையிடுவதுதான் உங்கள் ஸ்ட்ரெஸ்-க்கு காரணமா? தயக்கம் வேண்டாம்... அதை பெற்றோரிடம் நேரடியாகச் சொல்லுங்கள். சண்டை நடக்கும்போதல்ல... எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தபின்.

56. மன அழுத்தமாக உணர்கிறீர்களென்றால் உடனடியாக உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்... ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் என உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மன அழுத்தம் மட்டுப்படும். கூடவே யோகா போன்ற தியான முறைகளிலும் ஈடுபட்டால் உங்களை விட்டு மன அழுத்தம் ஓடோடி விடும்.

57. 'எதற்காக இந்த மன அழுத்தம்..?' என்பதே பல வேளைகளில் உங்களுக்கு விளங்காது. நண்பன் சொன்ன ஏதேனும் வார்த்தையாக இருக்கலாம். ஏதோ ஒரு தோல்வியாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த நபர் இன்னொருவருடன் பேசுவதால் இருக்கலாம். எதுவானாலும், அந்தக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதற்குள் ரொம்ப மூழ்க வேண்டாம். காரணத்தைக் கண்டுபிடித்தால் பலவேளைகளில் உங்களுக்கே 'ப்ப்பூ... இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்றோம்' எனத் தோன்றும்.

58. உங்களுடைய பெஸ்ட் ஹாபியை அந்த நேரம் கையில் எடுங்கள். ஏதேனும் கிரியேட்டிவிட்டி சார்ந்ததென்றால் ரொம்ப நல்லது. மன அழுத்தம், கற்பனை சக்தியை முடக்கும். நீங்கள் உங்கள் ஹாபியின் மூலம் அதை புதுப்பிக்கும்போது உங்கள் மன அழுத்தம் குறையும். 'அப்படி ஹாபி எதுவும் இல்லையே...' என்கிறீர்களா? சரி... சந்தோஷமாக, சந்தோஷமான சினிமா பாருங்கள்.

59. மிகவும் மனப்புழுக்கமாக இருந்தால், உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் சென்று மனம்விட்டுப் பேசுங்கள். வேடிக்கை பார்க்கும் நண்பர்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். பின் மன அழுத்தம் இரண்டு மடங்காகிவிடும்.

60. சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை அசை போடுங்கள். உங்களை யாராவது பாராட்டியிருக்கலாம், ஏதேனும் பரிசுகள் வாங்கியிருக்கலாம், நண்பனைச் சந்தித்திருக்கலாம், நகைச்சுவை படித்திருக்கலாம்... ஏதோ ஒன்று!

61. ஒருவேளை உங்களின் மன அழுத்தம் அதிகமாகி, ஓர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என பெற்றோர் விரும்பினால்... எகிறிக் குதிக்காதீர்கள். மன அழுத்தம் என்பது காய்ச்சல் போல ஒரு நோய்தான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' எனும் சிந்தனைகளை தூர எறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் குணம் பெறலாம்.

ட்ரெண்டி டீன்-ஏஜ்!

62. ட்ரெண்ட், ஃபேஷன்களைப் பின்பற்றுவது சந்தோஷம் தரும் விஷயங்கள்தான். ஆனால், உங்கள் தன்னம்பிக்கை குறைவினால் நீங்கள் ஃபேஷன் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. 'அழகில்லை' என க்ரீம்கள் பூசுவதெல்லாம் வேண்டாம். ஆனால், ஹேர் ஸ்டைல், டிரெஸ் ஸ்டைல் எல்லாம் உங்கள் விருப்பத்துக்கு அமைவதில் தப்பில்லை.

63. 'பிராண்ட்'களைப் பார்த்து மயங்க வேண்டாம். ஒரு பந்தாவுக்காக 'பிராண்ட்'களில் பணத்தைக் கொட்டாமல் கவனமாக இருங்கள். உடைகள் அணியும்போது அவை ரசிக்கும்படியாக இருப்பது முக்கியம். கவர்ச்சி ஆடைகளை ஒதுங்குங்கள்.

64. உங்களால் இயல்பாக இருக் கக்கூடிய 'கம்ஃபர்ட்னஸ்' தரும் ஆடை களையும், நகைகளையுமே அணியுங்கள். அங்கே குத்தி, இங்கே பிடித்து என உங்களுக்கு பிரச்னை தரும் ஆடை, ஆபரணங்களைத் தவிர்க்கலாம்.

65. ஹை ஹீல்ஸ், ஆரோக்கியத்துக்கு எதிரி. முதுகு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை விரும்பி அழைப்பது அது. எனவே, ஹீல்ஸ் எவ்வளவு சின்னதாக இருக்கிறதோ... அவ்வளவு நல்லது.

66. சில காஸ்மெடிக்ஸ், ஃபேஷன் ஜுவல்லரிகள் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். எனவே, உங்கள் உடம்புக்கு ஒப்புக் கொள்ளாதெனில் அவற்றைத் தயங்காமல் ஒதுக்கிவிடுங்கள்.

67. உடை, ஹேர் ஸ்டைல், அக்ஸஸரிஸ் என்று நடிகர், நடிகைகளின் வெளிப்புற ஃபேஷன்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், அவை உங்களை கேலிக்குரியவராக மாற்றிவிடக்கூடாது. உங்களுக்கு சூட் ஆகிறது என்றால் மட்டுமே தொடருங்கள்.

பருவ வயது பொழுதுபோக்குகள்!

68. டீன்-ஏஜ் பருவத்தினருக்கு நிச்சயமாக ஒரு ஹாபியாவது இருந்தாக வேண்டும். அது அவர்களுடைய திறமையை வளர்க்கும். கூடவே, தன்னால் எதையும் முன்னின்று செய்ய முடியும் எனும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும். அடிக்கடி மனம் குழப்பமடைவது, சோர்வடைவது, தோல்வி வந்தால் தொட்டால் சிணுங்கி போல துவண்டு போவதெல்லாம் டீன்- ஏஜ் பருவத்தில் சகஜம். ஒரு நல்ல ஹாபி இருந்தால், இத்தகைய மனக் குழப்பங்களுக்கான வடிகாலாகவும் அமையும்.

69. எழுதுங்கள். மனதில் தோன்றும் கவிதைகள், சிந்தனைகள், கற்பனைகள் என எல்லாவற்றையும். நிறைய எழுதுவது கற்பனை வளத்தை அதிகரிக்கும். யாரிடமும் சொல்ல முடியாததைக்கூட எழுதலாம். அது மனதை லகுவாக்கும். யாருக்குத் தெரியும்... உலகையே உலுக்கக் கூடிய எழுத்தாளர்கள் உங்களுக்குள் ஒளிந்திருக்கலாம்!

70. டி.வி., மொபைல், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று நாளெல்லாம் அதிலேயே அடிமையாகிக் கிடப்பது என்பது, பொழுதுபோக்கல்ல... பொழுதை வீணாக்குவது. ஹாபிக்கும், அடிக்ஷனுக்கும் வித்தியாசம் உண்டு... உணருங்கள்.

பாலியல் விழிப்பு உணர்வு!

71. டீன் பருவத்தினருக்கு பாலியல் கல்வி விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். பெரும்பாலான நாடுகளில் பாலியல் சார்ந்த சிக்கல்களுக்குப் பலியாவது பெரும்பாலும் டீன்-ஏஜ் பெண்களே! எனவே, பாலியல் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் சரியான நபரிடம் அதைத் தெரியப்படுத்துங்கள், தெளிவு பெறுங்கள். மருத்துவரோ, பெற்றோரோ, அல்லது பக்குவம் வந்த பெரியவர்களையோ அணுகுங்கள். தப்பான நண்பர்களிடம் பேசி சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.

72. இந்த வயதில் ஏற்படும் உடலின் வளர்ச்சி மாற்றங்கள் பெண்களுக்குள் பயத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்கி விடுகின்றன. இதைத் தெரிந்து கொள்ளும் ஆண்கள், அவர்களை வலைக்குள் விழ வைத்து விடுகிறார்கள். ஒரு த்ரில், ஒரு அனுபவம், ஒரு காதல் என ஏதேனும் மர்ம வலைகள் உங்களுக்கும் விரிக்கப்படலாம். எனவே, அதுகுறித்த விழிப்பு உணர்வு டீன் பருவத்தினருக்கு மிக அவசியம்.

73. முகம் தெரியாத நபர் உங்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுத்து உங்கள் கவனத்தைக் கவர்கிறாரா... தேவையில்லாமல் சில்மிஷப் பேச்சுகளை நடத்துகிறாரா? உடனடியாக 'கட்' செய்து விடுங்கள். தொடர்ந்தால், 'புகார் கொடுப்பேன்' என மிரட்டுங்கள். மீண்டும் தொடர்ந்தால், புகார் கொடுத்து விடுங்கள்.

74. ''உலகத்துல நடக்காததையா..?!'' என்றெல்லாம் காதலரே வலை விரித்தாலும் உஷார். ''உலகத்துல கொலைகூடதான் நடக்குது. அதுக்காக, கொலை செய்யக் கிளம்பிடலாமா..?'' என்று நறுக்கெனப் பேசி, சூழலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கூடவே, ''இது பத்தி இன்னொரு முறை பேச வேண்டாம்...'' என கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள்.

75. 'எமோஷனல் பிளாக் மெயில்' என்பது ரொம்ப டேஞ்சர். உங்களிடம் நட்பு காட்டி, அன்பு காட்டி, பாசம் காட்டி சிலர் தப்பு செய்யத் தூண்டுவார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவதும், பாசத்தைக் காட்டி மிரட்டுவதும் இந்த விஷயத்தின் ஒன்றுதான். எனவே, இத்தகைய கண்ணிகளில் சிக்காதீர்கள்.

டெக்னாலஜி டிஸ்டர்பன்ஸ்!

76. டீன்-ஏஜ் பருவத்தினர் இன்றைய டெக்னாலஜிகளை பற்றிய அப்டேட்களோடு இருப்பது, நல்ல விஷயம். அதேசமயம், அதன் ஆபத்தையும் உணர வேண்டும். குறிப்பாக, கேமரா மொபைல் போன்கள் மீது கவனமாக இருங்கள். நண்பர்கள் யாராவது உங்களை 'குறும்புப்' படம் எடுத்தால், கண்டிப்புடன் தடுத்துவிடுங்கள்.

77. எடுக்கப்பட்ட படம் என்பது சொல்லப்பட்ட வார்த்தை போல. அது எங்கெல்லாம் போய்ச் சேரும் என்பதைச் சொல்ல முடியாது. உங்கள் முன்னால் டெலீட் செய்யப்பட்ட படத்தைக் கூட மீண்டெடுக்கும் மென்பொருட்கள் உண்டு. அதனால் யாராவது ''போட்டோவை எடுக்கிறேன். நீயே டெலிட் செஞ்சுடு'' என்று சொன்னாலும், ''வேண்டவே வேண்டாம்'' என பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.

78. புளூ டூத் வகையறாக்களை எப்போதும் 'ஆஃப்' செய்தே வைத்திருங்கள். அதுதான் தேவையற்ற படங்கள், வீடியோக்கள் போன்றவை பரவ ஒரு முக்கிய காரணம். நினைவில் கொள்ளுங்கள்... உங்களை அறியாமலேயே உங்கள் மொபைலில் இருக்கும் சர்வ சங்கதிகளையும் திருட இப்போது வசதிகள் உண்டு.

79. பாலியல் சார்ந்த படங்கள் அனுப்புவது, செய்திகள் அனுப்புவதெல்லாம் தப்பு... நீங்கள் அனுப்பினாலும், உங்களுக்கு வந்தாலும். பாதிக்கப்பட்ட நபர் உங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தால்... விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

80. பிரவுஸிங் சென்டர் போகிறீர்களா? உஷாராக இருங்கள். பெரும்பாலானவை ரகசிய கேமரா வைத்து இயக்கப்படுபவை. உங்கள் சேட்டைகள் பதிவாகும். பின் உங்களை மிரட்டி மீண்டும் மீண்டும் தப்பு செய்ய வைப்பார்கள்.

81. இணையத்தில் வாழ்க்கைக்கு மிகமிகத் தேவையற்ற வலைதளங்களில் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் போன்ற பர்சனல் தகவல்களைக் கொடுக்காதீர்கள்.

82. தவறான தளங்களைத் தவிர்த்து, கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், உலக அரசியல் என ஆரோக்கியமான தளங்களை தரிசி யுங்கள். குறிப்பாக, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள முக்கியப் பத்திரிகைகள் இணையத்தில் இலவசமாகவே இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பயன்பெறுங்கள்.

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?!

83. டீன்-ஏஜ் பிள்ளைகளின் முன்னால் சகட்டுமேனிக்குச் சண்டையிடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குள் விவாதங்கள் இருக்கலாம். அவை ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து மோதல்களானாலும், கடைசியில் ஒரு முடிவுடன் முற்றுப் பெறுவது அவசியம். இல்லையேல் பெற்றோரின் சண்டை, பிள்ளைகளைப் பாதிக்கும்.

84. மகளோ... மகனோ... குழப்பத்துடன் தென்பட்டால், முதலில் பெற்றோர் செய்ய வேண்டியது, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது. எந்த வேலை இருந்தாலும் ஓரமாகப் போட்டு, அவர்களை நிதானமாக, ரிலாக்ஸ்டாக விசாரியுங்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு தாருங்கள்.

85. 'உலகம் முழுவதும் கெட்டுப் போனாலும் தன் குழந்தை பரிசுத்தமாக இருக்க வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தவிப்பு. அது தவறல்ல. அதற்காக குரூப் ஸ்டடி, பிரவுஸிங், காலேஜ் டூர், ஃப்ரெண்டோட போன் கால் என்று எதற்கெடுத்தாலும் 'புள்ள கெட்டுப் போய்டுவானோ...' என்று கண்மூடித்தனமாகப் புலம்பாதீர்கள். டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் வெளிப்படையான உரையாடல் அவசியம்.

86. அவர்களின் விருப்பங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். 'இது தவறு, இது சரி, இதன் விளைவுகள் இவை' என்பதை 'பளிச்' என சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கருத்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் உறுதியும் குழந்தைகளுக்குப் புரிய வேண்டியது முக்கியம்.

87. குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே தொடர்ந்த உரையாடல்கள் மிக அவசியம். 'அம்மாகிட்ட சொன்னா... நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க...' என மகள் நினைக்குமளவுக்கு அம்மா நடந்து கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே இந்த பிணைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.

88. அதற்காக 'அட்வைஸ் சொல்கிறேன் பேர்வழி' என நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். முதலில் அவர்களைப் பேசவிட்டு, அந்தச் சூழலை அலசி, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 'என்ன சொன்னாலும் அம்மா இப்படித்தான் சொல்வாங்க' என ஒரு மைண்ட் செட் அவர்களிடம் உருவாகிவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் பகிர்தலுக்கே வரமாட்டார்கள்.

89. எந்த விஷயத்துக்கும் 'பேசியாச்சே...' என்று ஒரே சிட்டிங்கில் முற்றுப்புள்ளி வைக்க எண்ணாதீர்கள். சில விஷயங்களை அடிக்கடி பேச வேண்டும். கெட்ட விஷயங்களைத் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறது உலகம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அதற்கேற்ப நல்ல விஷயங்களை அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பதும் அவசியம்.

90. உங்கள் குழந்தை செய்யக் கூடாத ஒரு தவறைச் செய்திருந்தாலும்கூட, உங்கள் குழந்தைக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள். இது, 'அம்மா, அப்பா எப்பவும் உனக்கு துணையா இருப்போம்' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டுமே தவிர, 'வரட்டும் பார்த்துக்கலாம்டா...' என்று அவர்களின் தவறை ஊக்குவிப்பதாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

91. சினிமாவுக்குப் போவது, அவுட்டிங் போவது சின்னச் சின்ன டீன் தேவைகளை, குறும்புகளை அனுமதியுங்கள். ஆனால், சிகரெட்... தண்ணி போன்றவையெல்லாம் தெரிய வந்தால், முளையிலேயே கிள்ளிவிடுங்கள். எதை அனுமதிக்கலாம், எது அறவே கூடாது என்பதில் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும்.

92. டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு அதீத பொறுமை அவசியம். திடீரென கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பிள்ளைகளை நிதானத்துடன் அணுகுங்கள். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டால் போச்சு. காரியம் கெட்டு விடும். டீன் பருவத்தில் கலவையான உணர்வுகள் மேலோங்கும். அதற்கெல்லாம் காரணம், அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

93. பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது திடீர் விசிட் கொடுங்கள். ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுங்கள். பிள்ளைகளின் தேவை என்ன என்பதை கவனியுங்கள்.

94. பிள்ளைகளைச் சமூகக் குழுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசுங்கள். நல்ல ஹாபிகளுக்கு உற்சாகமூட்டுங்கள். அடிக்கடி வெளியே சுற்றுலா செல்லுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் கேட்டறியுங்கள். இதெல்லாம் டீன்-ஏஜ் பருவத்தை வளமாக்கும்.

95. உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மேல் ஒருவேளை உங்களுக்குத் திருப்தியில்லை என்றாலும், ''இனிமே அவன்கூட சேர்ந்தேனா பாரு...'' என்று அதை அவர்களிடம் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். அந்த எதிர்ப்பு, அவர்களின் நட்பை இன்னும் நெருக்கமாக்கும். மாறாக, உங்கள் பிள்ளைக்கு அந்த நண்பரை பிடிப்பதற்கான காரணங்களை இதமாகப் பேசி தெரிந்துகொண்டு, உங்களுக்கு அந்த நண்பரை பிடிக்காததற்கான காரணத்தையும் நிதானமாக உங்கள் பிள்ளையிடம் தெரிவியுங்கள். எந்த தரப்பின் காரணங்கள் வலுவாக இருக்கிறதோ, அதன்படி முடிவெடுங்கள்.

96. இன்றைய இளசுகளின் கவச குண்டலம், செல்போன். எனவே, அதைப் பார்த்து டென்ஷன் ஆகாதீர்கள். அவர்கள் வீட்டில் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை முதலில் லிமிட் செய்யுங்கள். பின், அதை தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மெள்ள மெள்ள ஏற்படுத்துங்கள்.

97. 'அன்னிக்கு நீ டியூஷனை கட் அடிச்ச இல்ல...' என்று ரீவைண்ட் செய்து அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பது, டிபிக்கல் பேரன்ட் பிஹேவியர். இதனால் டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு எரிச்சல், எதிரி மனப்பான்மை பெற்றோர்கள் மீது ஏற்பட வாய்ப்பு உண்டு... கவனம்.

98. வரும் முன் காப்பது நலம். செல்போன் வாங்கிக்கொடுத்து, நெட் கனெக்ஷன் கொடுத்து, பைக் வாங்கிக்கொடுத்து என அனைத்தையும் செய்துவிட்டு, பின் அதில் அவர்கள் பொழுதை வீணாக்குவதை சொல்லிப் புலம்பி பயனில்லை. எனவே, உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிக்கொடுங்கள்... அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் அல்ல!

99. டீன்-ஏஜ் பிள்ளைகளின் ரகசிய சிநேகிதன், கண்ணாடி. அதற்காக, ''எப்பா பார்த்தாலும் கண்ணாடி முன்னாலயே நின்னுட்டு...'' என்று அவர்களை பழித்து பல்லவி பாடாதீர்கள். அவர்களது வயதையும், நிலையையும் புரிந்து கொண்டு இது போன்ற விஷயங்களில் சில வேளைகளில் அவர்களோடு கூடவே இருந்தும், சில நேரங்களில் கண்டும் காணாமல் நாசூக்காக நடந்து கொண்டால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்'தான்.

100. பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி குறித்து பெற்றோர் பயப்படக் காரணம், அதுகுறித்த தெளிவு இல்லாததுதான். பாலியல் கல்வியில் உடல் ஆரோக்கியம், தகாத உறவுகள், அதன் விளைவுகள், அதனால் பாதிக்கப்படப் போகும் எதிர்காலம், கலாசாரம், குடும்ப சூழல் என அனைத்தும் ஆழமாக உணர்த்தப்படும். பாலியலில் டீன்-ஏஜ் பருவத் தினருக்கு எழும் கிளர்ச்சியைத் தாண்டி அதிலுள்ள விளைவுகளையும் புரிய வைப்பதே பாலியல் கல்வியின் நோக்கமாக இருக்கும். எனவே, பதற்றம் வேண்டாம் பெற்றோர்களே!

வானவில்தான் இந்த வாலிப தேசக் கொடி. அதன் வண்ணங்களை... எண்ணங்களை ரசிப்போம்!
தொகுப்பு: யாணன்
தொகுப்புக்கு உதவியவர்கள்...
ஜெனட் லியோ, டீன்-ஏஜ் சைக்காலஜிஸ்ட், சென்னை
டாக்டர் டி.எஸ். ராதாகிருஷ்ணன், சைக்காலஜிஸ்ட்,
பீப்பிள் அண்டு சிஸ்டம்ஸ், சென்னை

Thursday, November 12, 2009

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிது வெளிச்சம்!
புல்லின் நிழலில் இளைப்பாறுங்கள்

500 ரூபாய்க்கு ஒரு காசோலையும் அத்துடன் ஒரு கடிதமும் இணைந்த தபால் ஒன்று என் முகவரிக்கு வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் பரிச்சயமானதாக இல்லை.

'அன்புடைய ராமகிருஷ்ணன், என் மகளின் இதயச் சிகிச்சைக்குப் பண உதவி தேவை என்றுநாளி தழில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் அனுப்பிய உதவிக்கு நன்றி. கடந்தவெள்ளிக் கிழமை என் மகள் அறுவை சிகிச்சைக்கு முன்பா கவே இறந்துவிட்டாள். ஆகவே, அவளுக்காக உங்களைப்போல பலரும் அனுப்பிய பணம் அவசியம் அற்றுப் போய்விட்டது. இனி, அப்பணம் எங்களுக்குத் தேவை இல்லை.

என் மகள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பணம் முழுவதையும் அதை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பி வருகிறேன். என்னைப்போல உதவி வேண்டும் இன்னொரு நபருக்கு அந்தப் பணம் பயன்படக்கூடும் என்ற நல்லெண்ணம்தான் இதற் கான காரணம். இதை நீங்கள் தவறாக எண்ணவேண் டாம். முகம் தெரியாத மனிதருக்குச் செய்யும் உதவி, கடவுளுக்குச் செய்யும் அரும்பணி. அதற்காக என் குடும்பம் உங்களுக்கு என்றும் நன்றியுடையது. இப்படிக்கு செல்வ விநாயகம்' என்றிருந்தது.

அந்தச் செய்தி ஒரு பக்கம் என்னைத் துக்கம் அடையச் செய்தது. இன்னொரு பக்கம் இவ்வளவு உயர்வான மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்களா என்று வியப்படையவும் வைத்தது. எவ்வளவு உன்னதமான நேர்மை.


தன் பெண் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு இந்தப் பணம் தங்களுக்கு எதற்கு? அதை உரியவர்களுக்குத் திருப்பி அனுப்புவதன் வழியே அது யாரோ ஒருவருக்குப்பயன்படும் என்று எண்ணுவது எத்தனை உயரிய சிந்தனை.

உதவி என்று பணம் அனுப்பியவர்களில் எவரும் கணக்கு கேட்கப்போவது இல்லை. எப்படிப் பணம் செலவழிக்கப்பட்டது என்று கண்காணிக்கப்போவதும் இல்லை. ஆனால், வறுமையான சூழலுக்குள்ளும் அந்தப் பணம் தங்களுக்குத் தேவையற்றது என்று திருப்பித்தரும் மனதுகொண்ட அந்த மனிதர் மிக உயர்வானவராகத் தோன்றினார்.

அன்று இரவு எல்லாம் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். எங்களிடம் மீதமாக உள்ள பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க முன்வருகிறோம் என்று யாராவது எங்காவது சொல்லியோ, நடந்தோ கேள்விப்பட்டு இருக்கிறேனா? நினைவில் இல்லை. பொதுமக்களுக்கு உரிய பணம் கோடிக்கணக்கில் பயன்பாடு இன்றி முடங்கிக்கிடக்கின்றன. உதவியின் பெயரால் திரட்டப்படும் பெருவாரியான பணம் முறைகேடான வழிகளில் செலவழிக்கப்படும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மருத்துவச் சேவை செய்வதைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிக்கொண்ட நிறுவனங்கள், தனிநபர்கள் பெருகிவிட்டதைக் காலம் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. இவ்வளவு கெட்டு அழிந்த சூழலுக்குள் அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்று திருப்பித் தரும் மனது ஒரு மனிதருக்கு வருகிறது என்பது நம்பிக்கை தரும் செயல். இன்றைய மருத்துவச் செலவுகள், நோயை விடக் கொடிய வலியாக உருவெடுக்கின்றன. நோய்மை உருவாக்கிய பயத்தை விட, மருத்துவமனைகள் உருவாக்கிய பயம் அதிகமாகிறது.

நோயின்போதுதான் ஒவ்வொரு மனிதனும் தன் வயதை மறந்துபோகிறான். குழந்தையைப்போல யாரோ தன்னை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறான். அன்புக்காக ஏங்கத் துவங்குகிறான். வேறு எந்தச் சூழலை விடவும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட பிறகு, கையில் காசு இல்லாமல் போவதுதான் மிக மோசமான துரதிர்ஷ்டம். மருந்துகள் நோயில் இருந்து மனிதனை விடுவிக்கக் கூடும். ஆனால், தொடர்ந்த அக்கறையும் அன்புமே நோயாளியைப் பூரண சொஸ்தமாக்குகிறது. இயல்புக்குத் திரும்பச் செய்கிறது.

வில்மா ருடால்ஃப் என்ற ஓட்டப் பந்தய வீராங்கனையைப்பற்றிய புத்தகம் ஒன்றினை வாசித்தேன். 1960-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸில் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்ற அமெரிக்க வீராங்கனை. உலகின் மிக வேகமாக ஓடும் பெண் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்.

இந்த வெற்றியின் பின்னே ஒரு பெண்ணின் மன உறுதி மறைந்து இருக்கிறது. வில்மா சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, கால்கள் சூம்பிப் போய் படுக்கையிலே கிடக்கிறாள். அவள் வயதுப் பிள்ளைகள் வீதியில் விளையாடும்போது அவளால் வீட்டுக்குள்கூட நடக்க முடியவில்லை. உதவிக்கு அம்மாவோ, சகோதரிகளோ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. வலது கால் வளைந்து இருந்தது.

மருத்துவர்கள் அவளைத் தன் வாழ்நாள் முழுவதும் சூம்பிய கால்களுடன் மூலையில்தான் கிடக்கக் கூடும் என்று சொன்னார்கள். ஆனால், அதைவில்மாவின் தாய் நம்பவில்லை. தன் மகள் நடப்பாள், ஓடுவாள், ஏன் பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவாள் என்று உறுதியாகச் சொன்னாள். அது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை என்று மருத்துவர்கள் பரிகாசம் செய்தார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் வில்மாவுக்கு நடக்க உதவி செய்தாள். மற்ற சகோதரிகளும் துணை நின்றார்கள். 10 வயது வரை இந்த சிகிச்சை நாள் தவறாமல் நடைபெற்றது. வில்மா லேசாகக் காலை ஊன்றி நடக்க ஆரம்பித்தாள். தினமும் அவளை ஐந்து மைல் தூரம் நடக்கவைப்பது என்று அம்மா வைராக்கியமாக அவளை இழுத்துக்கொண்டு நடந்தாள். இரவில் கால் வீக்கம் கண்டுவிடும். வலியில் கண்ணீர் பெருகும். சகோதரிகள் அவள் வீங்கிய காலுக்கு ஒத்தடம் தருவார்கள். ஒவ்வொரு நாளும் சித்ரவதையாக இருக்கிறதே என்று வில்மா கண்ணீர்விடுவாள். ஆனால், அம்மா... அவளை நடக்கவும், ஓடவும் பழக்கினாள். வலி மறந்து போய் ஓட வேண்டும் என்ற வெறி மனதில் உண்டானது. 12 வயதில் தானாக ஓடத் துவங்கினாள். அக்காவுடன் பந்து விளையாடத் துவங்கினாள். அதன் பிறகு, கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. சில நாட்கள் அவள் மணிக்கணக்கில் ஓடினாள். வியர்வையும், களைப்பும், வலியும் ஒன்றுசேர்ந்து அவளை அமுக்கின. ஆனால், அவள் துவண்டுவிடவில்லை. 1956-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றாள். அடுத்த ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்கள்.

வில்மாவின் வெற்றிக்கு யார் காரணம்? எங்கே இருந்து அவளது நம்பிக்கை உயிர் பெற்றது என்று நேர்காணலில் கேட்டபோது, தன்னால் நோயில் இருந்து விடபட முடியும் என்று அம்மா முழுமையாக நம்பினாள். அதற்குக் குடும்பமே தன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டது. ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு இருந்தால், கால்கள் முடங்கி வீட்டில் மூலையில்கிடந்து செத்துப் போயிருப்பேன் என்று அறிவித்தாள் வில்மா.

அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க, எனக்கு வில்மாவை விடவும் அவளது தாய் மிக உன்னதமான வளாகத் தோன்றினாள். எவ்வளவு பெரிய போராட் டம். தன் மகள் பந்தயத்தில் ஓடி வென்றபோது அந்த தாயின் மனது எவ்வளவு உவகைகொண்டு இருக்கும். அந்த நிமிஷத்தில் அந்தத் தாயின் கண்களில் இருந்து பீறிட்ட கண்ணீரைப்போல உலகில் உயர்வானது வேறில்லை. நம்பிக்கை ஒரு விதை. அது மனதில் ஆழமாக ஊன்றிவிட்டால், அதில் இருந்து நிச்சயம் அதிசயங்கள் விளையத் துவங்கும்.

நம்பிக்கையை உருவாக்குவதும், வளர்த்து எடுப்பதும் எளிதானது இல்லை. அது நம் வேலை இல்லை என்றே பெரும்பாலும் நம்புகிறோம். அது உண்மை இல்லை. நம்பிக்கை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய ஆதாரப் பணி.

'Pay it Forward' என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த் தேன். மிகச் சிறப்பான படம் என்று வகைப்படுத்தமுடி யாது. ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய படம்.

டிரேவர் மெக்கன்சி என்ற 11 வயதுச் சிறுவன் அமெரிக்கப் பள்ளி ஒன்றில் படிக்கிறான். அவனது பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் ஐடியா ஒன்றினை ஒவ்வொரு மாணவனும் மாதிரித் திட்டமாக தயாரித்து வந்து, வகுப்பறையில் விளக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள்.

டிரேவர் ஒரு திட்டத்தை முன்மொழிகிறான். அந்தத் திட்டம் என்னவென்றால், நாம் முகம் அறியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்ல வேண்டும். அவர்கள் இதுபோல தொடர்ந்து செய்ய ஆரம் பித்தால், இரண்டு வாரங்களில் 47 லட்சத்து, 82

ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். நாம் செய்ய வேண்டியது முன் அறிமுகம் இல்லாத மூன்று நபர்களுக்கு உதவ முன்வருவது மட்டுமே என்கிறான். இதை வகுப்பறையில் மாணவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால், ஆசிரியர் இது அருமையான திட்டம் என்று பாராட்டுகிறார்.

டிரேவர் இந்தத் திட்டத்தைத் தானே நடை முறைபடுத்திப் பார்க்க முயற்சிக்கிறான். தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத போதை மருந்து அடிமை ஒருவனுக்கு உதவி செய்கிறான். வீட்டுக்கு அழைத்து வந்து உணவு தருகிறான். இந்த உதவும் கரங்களின் சங்கிலி உருவாக்கம் துவங்குகிறது. டிரே வரின் இந்த முயற்சியைப் புரிந்துகொள்ளாத அம்மா கோபப்படுகிறாள். அவன் வீட்டைவிட்டு வெளியே போகிறான். நண்பனுக்கு உதவி செய்யப் போய், போக்கிரிகளிடம் மாட்டிக்கொண்டு கத்திக் குத்து வாங்குகிறான்.

ஆனால், இந்த உதவும் சங்கிலியால் பலன் பெற்ற ஒரு பத்திரிகையாளன் எளிமையான இத்திட்டம் பற்றி எழுதத் துவங்குகிறான். திட்டம் வெற்றி பெற ஆரம்பிக்கிறது. உலகெங்கும் உதவும் சங்கிலி வளர்ந்துகொண்டே போகிறது.
ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்கிறது இந்தப் படம். இது மறுக்க முடியாத உண்மை. இந்த உதவிக்கு எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. உதவி என்பது செயலாகவோ, பணமாகவோ, கற்றுத்தருவதாகவோ, ஆறுதலாகவோ, அன்பாகவோ, ஒரு நல்ல செய்தியை, சிந்தனையை அடுத்தவருக்குச் சொல்வதாகவோ என எப்படியும் இருக்கலாம். ஆனால், அது விருட்சம் போலக் கிளைவிட்டுக்கொண்டே செல்ல வேண்டும். இந்த சங்கிலித் தொடர் உதவிகள் வழியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள்.

இந்தப் படம் உருவாக்கிய பாதிப்பில் இன்று நீண்டு சங்கிலித் தொடர் போல உதவும் முயற்சிகள் உருவாகி உள்ளன. முகம் தெரியாமல் மனிதர்கள் பொருளுதவி செய்கிறார்கள். உலகெங்கும் இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது.

இதற்கான முதற்பணி உங்களால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்யுங்கள். அறிந்த, சிறந்த விஷயங்களை மூன்று பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். ஆலமரத்தின் நிழல் மட்டுமில்லை... புல்லின் நிழல்கூட ஏதோ ஒன்றுக்கு இளைப்பாறுதல் தருகிறது என்பதுதான் உண்மை!

Friday, October 30, 2009

vikatan மழலைகள் ஸ்பெஷல் !

மழலைகள் ஸ்பெஷல் !
சூப்பர் டிப்ஸ்....
உங்கள் செல்லக்குட்டி...இனி, வெல்லக்கட்டி!

'குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல... அறிவியலும்கூட!' ((Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, 'அறிவியல்பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி' என்று எதற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது... நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது... என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண்டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகவேதான் சமீபகாலங்களாக 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்!' என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள குழந்தையியல் அறிஞர்கள். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கான பயிற்சிகள்கூட வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. அதன் ரத்தினச் சுருக்கமாக நெய்யப்பட்டுள்ள, குழந்தை வளர்ப்புக்கான இந்த நூறு டிப்ஸ்கள், உங்கள் குழந்தைகளை 'குட் பாய்', 'குட் கேர்ள்' ஆக்கிவிடும்!

அப்புறமென்ன... நீங்கள்தான் 'பெஸ்ட் அம்மா - அப்பா'!

ஊட்டி வளர்க்காதீங்க!

1. ஒன்றரை வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களாகவே உண்ணப் பழக்குங்கள். இட்லி துண்டுகளிலிருந்து உருண்டை சாதம் வரை படிப்படியாகப் பழகட்டும். பிள்ளைகளின் உண்ணும் ஆர்வத்தை தூண்ட இதுவே முதல் படி.

2. குழந்தைகள் உங்களைப் போலவே 'சுத்தபத்தமாக' சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. உணவு சிந்தும், உடலெல்லாம் அழுக்காகும், நேரம் எடுக்கும்... பரவாயில்லை. அதற்காகக் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு. குழந்தைகள், உணவை வெறுக்க இதுவும் ஒரு காரணமாகிவிடும்.

3. குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு மிகவும் முக்கியம். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். 'இன்னும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லதுதானே' என்று திணிப்பது, சரியான அணுகுமுறையல்ல.

4. 'கொஞ்சம் சோறு சாப்பிடும்மா... சாக்லெட் வாங்கித் தரேன்', ''கொஞ்சம் கீரை சாப்பிடும்மா... 'குர்குரே' வாங்கித் தரேன்'' என்று ஆசை காட்டி சாப்பிட வைப்பது, அம்மாக்கள் செய்யும் தவறு. அது, 'இந்த சோற்றையும் கீரையையும் கஷ்டப்பட்டு (!) சாப்பிட்டுட்டா... சாக்லெட், ஸ்நாக் இதெல்லாம் கிடைக்கும்!' என குழந்தைகளுக்கு உணவின் மீது இன்னும் சலிப்பையும், நொறுக்குத் தீனியின் மீது இன்னும் ஆசையையும் விதைக்கும்!

5. ''என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்கமாட்டேன்... உப்பே சேர்க்க மாட்டேன்'' என்று கர்வப்படும் அம்மாக்களே, கவனம்! ஏனெனில், குழந்தைகளுக்கு இனிப்பு, உப்பு என எல்லா சுவையும், சத்தும் தேவைதான்! எனவே எந்தச் சுவையையும், அதன் மூலம் சத்தையும் அவர்களுடைய உணவிலிருந்து முற்றிலுமாக நீக்கும் தவறைச் செய்து விடாதீர்கள்! கூடவே, இனிப்பே சாப்பிடாத குழந்தைக்கு பின்னாளில் இனிப்பு அறிமுகமாகும்போது, வட்டியும் முதலுமாகச் சேர்த்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது!


6. 90:10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90:10? சிம்பிள்... 90 சதவிகிதம் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக இருக்கட்டும். இனிப்பு, ஸ்நாக்ஸ் என 10 சதவிகிதம் அவர்களின் சுவைக்காக இருக்கட்டும். தப்பில்லை.

7. எப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பது தவறு. குழந்தைகள் உணவு உண்ண வேண்டிய நேரத்தில்தான் உண்ண வேண்டும். சதா கொறித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியாது.

8. உணவு விஷயத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு டைப் சாப்பாடு... குழந்தைகளுக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது, நீங்கள் சிப்ஸ், குளிர்பானம் சாப்பிட்டால் குழந்தையும் அதையேதான் விரும்பும்.

9. 'ஜர்னல் பீடியாட்ரிக்' எனும் பத்திரிகையின் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ்... இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 100% பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்களிலும் உண்மைஇல்லை. எனவே, நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுங்கள். அதுவே பெஸ்ட்!

10. ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது. குறைந்தபட்சம் அதன் ஸ்டைலையாவது மாற்றுங்கள்; கொஞ்சம் ஷேப்பை மாற்றுங்கள். உதாரணமாக, குழந்தைக்கு எழுத்துக்கள் வடிவத்திலோ, படகு, பூ போன்ற வடிவங்களிலோ பூரி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றை சுட்டுக் கொடுங்கள். பிள்ளைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
தன்னம்பிக்கை ஊட்டுங்க!

11. உங்கள் அன்பை குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். ஆம்... 'அப்பா, அம்மாவுக்கு என் மேல அவ்ளோ அன்பு' என்று குழந்தை உணரும்படியான உங்களின் நிபந்தனையற்ற அன்பே அவர்கள் தன்னம்பிக்கைக்கான முதல் தேவை.

12. சமையலில் உதவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என வீட்டிலுள்ள சின்னச் சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது, அவர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

13. குழந்தைகள் எப்போதும் எதையாவது திறந்து, மூடி என்று நோண்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அதிலும் கிச்சன் கப்போர்டுகளும் கரண்டிகளும் அவர்களுடைய ஃபேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையைத் தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள்தான். கரண்டியால் தட்டி சத்தம் எழுப்புவது... டம்ளர்களில் தண்ணீர் ஆற்றுவது... இப்படி 'எனக்கும் தெரியும்' என்று அவர்கள் செய்யும் இந்தச் சேட்டைகளை ஆங்கிலத்தில் 'பேபி புரூஃபிங்' (Baby proofing) என்பார்கள். எனவே, இதற்கெல்லாம் அவர்களை அனுமதியுங்கள். கூடவே, அங்கு ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.

14. நல்ல வழிமுறைகள் காட்டுங்கள். எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சில ஒழுங்குகளைப் புகுத்துங்கள். உதாரணமாக... வீட்டுப் பாடங்கள் செய்வது அல்லது விளையாட்டுகளில் சில விதிமுறைகள் தருவது. அவற்றை அவர்கள் கடைபிடிக்கப் பழக்குங்கள். சரியாகச் செய்யும்போது பாராட்டுங்கள்.

15. கோயிலுக்குச் செல்லும் நேரம், அவுட்டிங் செல்லும் இடங்கள் என சிலவற்றை குழந்தைகளைக் கலந்தாலோசியுங்கள். ''இதுக்கெல்லாம் எதுக்கு அதுககிட்ட கேட்டுகிட்டு..?'' என இழுக்காதீர்கள். முடிவெடுப்பது நீங்கள்தான். ஆனால், அவர்களிடம் கலந்துரையாடுவது, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். தனது கருத்தும் கேட்கப்படுகிறது என்பது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும்.

16. நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். அந்தக் குடும்பங்களிலும் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிறப்பு. அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வதே போதுமானது. பிற குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல், உங்கள் குழந்தையின் வெளி உலகப் பழக்கத்தை வளர்க்கும்.

நீங்களும் குழந்தையாகுங்க!

17. குழந்தைகளுக்குச் செல்லப் பெயர் சூட்டுங்கள். அது 'கரடிக் குட்டி'யாகவும் இருக்கலாம், 'ராசா'வாகவும் இருக்கலாம். அந்தப் பெயர்கள், பெற்றோரின் மனதில் தனக்கு ஸ்பெஷல் இடம் உண்டு என குழந்தையை சிலிர்க்க வைக்கும்.

18. குழந்தைகளுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்களும் ஒன்றுதான்... தெருமுனை 'பார்க்'கும் ஒன்றுதான். அவர்கள் உற்சாகமாக விளையாடக்கூடிய ஓர் இடமாக இருந்தால் அவர்களுக்கு அது போதுமானது. எனவே, பெரிய பெரிய பிளான்களுடன் காத்திராமல், அடிக்கடி அவர்களை அருகிலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

19. தினமும் ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிடுங்கள். பேசி, சிரித்து, விளையாடி அவர்களிடம் ஸ்கூல் கதைகளைக் கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இணைப்பை இது வலுவாக்கும்.

20. ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டா? தினமும் குடும்பமாக கூடி பிரார்த்தனை செய்யுங்கள். குழந்தைகளுக்கு வழிகாட்டவும், குடும்பமாக நேரம் செலவிடவும் இது உதவும்.

21. குழந்தைகள் உங்களை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைக்கலாம் எனும் அனுமதி கொடுங்கள். அவர்களுடைய அவசரத் தேவைக்கோ, மனம் சோர்வாக இருந்தாலோ, திடீர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவோ அவர்கள் உங்களை அழைக்கட்டும். அலுவலகம், மீட்டிங் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். குழந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் கூப்பிட்டதும் பேசுபவராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

பழக்கத்தை பயிரிடுங்க!

22. குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். குழந்தைக்கு எப்போது தூக்கம் வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். கண்ணைக் கசக்கும், கொட்டாவி விடும், தோளில் தொங்கும், சோர்வாய் இருக்கும். உடனே குழந்தையைப் படுக்க வையுங்கள். இப்படி கொஞ்ச நாள் பழக்கினாலே, தூக்கம் வரும்போது தானாகப் போய் படுத்துக்கொள்ளும்! படுக்கையறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டும். அது குழந்தையை நீங்கள் கவனிப்பதற்காக! குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு வெளிச்சம் வைக்காதீர்கள்.

23. குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை நீங்கள் மிகச் சின்ன வயதிலேயே நிறுத்திவிட முடியும். முயற்சிதான் தேவை. நன்றாகப் பழகி விட்டால் பின்னர் அதை நிறுத்துவது வெகு கடினம்.

24. சின்னதாக குழந்தை தவறினாலே பதறியடித்துத் தூக்காதீர்கள். அவர்கள் தானாக எழுந்து வரப் பழக்குங்கள். நீங்கள் அருகில் இருந்து ஊக்கப்படுத்தினாலே போதும். நீங்களே வியக்கும்படி அவர்கள் வளர்வார்கள்.

25. ''கரீஷ்மாவை விட நீதான் சூப்பர்'' என்றெல்லாம் பிதற்றாதீர்கள். குழந்தைகளுக்கு வரக்கூடாத ஒரு பழக்கம், பிறரைக் குறை சொல்லுதல். அதேபோல ''தமிழ்ச்செல்வி எவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடறா... நீயும் இருக்கியே'' என பிற பிள்ளைகளைப் பாராட்டி, உங்கள் குழந்தையைத் தாழ்த்தாதீர்கள். அது, உங்களை அறியாமலேயே அவர்களின் மனதைச் சிதைப்பதற்கு காரணமாகிவிடும்.

26. பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் என்று குழந்தைகளுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுங்கள். கூடவே, நீங்களும் அதுபோல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங்கள் குழந்தையும் அப்படியே திட்டும். அதைத் தவிர்த்து, அவர்களுடைய குணாதிசயங்களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.

தட்டிக் கொடுங்க!

27. ''இது என் மகள்'' என அறிமுகப்படுத்துவதை விட, ''இது என் மகள் வேத வர்ணா'' எனப் பெயருடன் அறிமுகப்படுத்துங்கள். இது குழந்தைகளுக்கு ரொம்பவே உற்சாகம் ஊட்டும். அவர்கள் முக்கிய மானவர்கள் எனும் எண்ணத்தைத் தரும்.

28. குழந்தையை ஏதாவது சில எக்ஸ்ட்ரா பழக்கங்களில் ஈடுபடுத்துங்கள்... நடனம், இசை, நீச்சல் என குழந்தையின் விருப்பத்துக்குத் தக்கபடி. கூடவே, நீங்களும் அந்த வகுப்புகளுக்குச் சென்று மற்ற குழந்தைகளின் அன்னையருடன் உரையாடுங்கள். நீங்கள் நம்பவே முடியாத அளவுக்கு அனுபவங்கள் இதில் கிடைக்கும்... இருவருக்கும்.

29. ஏதேனும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களைப் பேச உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகளிடம் கேள்வி கேட்டால் முந்திக்கொண்டு நீங்கள் பதில் தராதீர்கள். குழந்தைகள், அவர்களைப் பற்றி அவர்களே பேசிப் பழகட்டும்.

30. ''உனக்குத் தெரியாது, நீ எப்பவுமே தப்பு தப்பாதான் பண்ணுவே, உன்கிட்ட குடுத்தா உருப்பட்ட மாதிரிதான்''

- இதெல்லாம் அம்மாக்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள். இப்படி எதேச்சையாக, ஜஸ்ட் லைக் தட் நீங்கள் சொல்லிப் போகும் வார்த்தைகள், குழந்தைகளின் தன்னம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும்... ஜாக்கிரதை!

31. குழந்தைகளாலும் சில விஷயங்களைச் செய்ய முடியும் என நம்புங்கள். அவர்கள் மேல் நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள்.

32. டிரெஸ்ஸிங்கில் இருந்து டிராயிங் வரை அவர்களுடைய 'ஐடியாக்கள்' சுமாராக இருந்தாலும் அவற்றை முடிந்த வரை மதித்துச் செயல்படுத்துங்கள். புதுப் புது ஐடியாக்களுடன் அவர்கள் களமிறங்க இது ரொம்பவே தூண்டுதலாக இருக்கும்.

33. குழந்தையுடன் ரொம்பவே ஸ்பெஷலாக கொஞ்ச நேரம் செலவிடுங்கள். வேறு எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நேருக்கு நேர் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை நீங்கள் ஸ்பெஷலாகக் கவனிப்பதே அவர்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

34. குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்யும்போது முடிந்தால் அருகில் இருங்கள். இல்லையேல் தினமும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை சரி பார்த்துப் பாராட்டுங்கள். அவர்களை அது உற்சாகப்படுத்தும்.

கண்டிக்கவும் மறந்துடாதீங்க!

35. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். குழந்தைகளைப் பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை மனதில் கொண்டு தண்டிக்க வேண்டும். ஆனால், அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு, வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.

36. குழந்தையை அப்பா கண்டிக்கும்போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்தால் இரண்டு பேருமே கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதேபோல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அதுதான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.

37. ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும்போதே தண்டிக்காதீர்கள். செய்தது தவறு என புரிய வையுங்கள். சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள்.

38. 'மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட்டேதான் இருப்பாங்க' என குழந்தை நினைக்கக் கூடாது. தவறு செய்யும்போது அந்த நேரத்திலேயே கண்டித்து, தண்டிப்பது நல்லது... அப்பா வரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட.

39. மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை... செல்லமாகவோ, கண்டிப்புடனோ குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் கையால் வறியவருக்கு உதவிகள் செய்ய வைக்கலாம். அதற்கு முதல் கட்டமாக, கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வது முக்கியம்.

40. குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வருவது சகஜம். உண்மை யில் குழந்தைகளுக்கு 'இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது' என்பதல்லாம் தெரியாது. அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். தொடர்ந்தால், கண்டிக்க வேண்டும்.

41. காலம் தவறாமையை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். குறிப்பாக, நீங்களும் அதைக் கடைபிடியுங்கள். அரக்கப்பரக்க குழந்தையை ஸ்கூலுக்கு இழுத்து கொண்டு ஓடுவது... அப்படியும் பத்து நிமிடம் லேட்டாக கொண்டு விடுவது போன்ற பழக்கங்களை விட்டொழியுங்கள். குழந்தைக்கும் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டாகப் பழக்குங்கள்.

விருப்பத்தை வெறுக்காதீங்க!

42. குழந்தைகளிடம் ஏதேனும் கலை ஆர்வம் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அந்த ஏரியாவில் குழந்தைக்கு வாய்ப்பு களை அதிகமாக உருவாக்கிக் கொடுங்கள். மேஸ்ட்ரோ இளைய ராஜாவோ, ஓவியர் எம்.எஃப். ஹ§சைனோ உங்கள் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கலாம் எனும் எண்ணம் கொண்டிருங்கள்.

43. இசை, குழந்தைகளின் கவனத்தையும், மனதையும் கூராக்கும். இசை உங்கள் குழந்தைக்குப் பிடிக்குமெனில் வீட்டில் அடிக்கடி இசை கேட்க வையுங்கள். குழந்தைகளின் இசை ஆர்வம் அதிகரித்தால் அவர்களுடைய கணித அறிவும் வளரும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இரண்டையுமே நிர்ணயிப்பது மனிதனின் வலது மூளைதான்!

44. அவரவருக்குப் பிடித்தால்தான் அதன் பெயர் 'ஹாபி'. எனவே, செஸ், ஷட்டில் என்று உங்களின் விருப்பத்தையே குழந்தைகளின் விருப்பமாகத் திணிக்காமல், அவர்களின் விருப்பமான 'ஹாபி'யை தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்த்து விடுங்கள். அதற்காக காலை, மாலை, சனி, ஞாயிறு என்று வாரத்தில் அவர்களை நான்கு 'எக்ஸ்ட்ரா ஆக்கிவிட்டி' வகுப்புகளில் சேர்க்காமல், ஏதாவது ஒன்றில் சேர்த்து, அதில் அவர்களை முழுமையாக்குங்கள்.

பாதுகாக்க மறந்துடாதீங்க!

45. எக்காரணம் கொண்டும் உங்களுடைய அலுவல் டென்ஷனையோ, பிறர் மேல் உள்ள கோபத்தையோ குழந்தைகளிடம் காட்டவே காட்டாதீர்கள். நீங்கள் அவசரத்திலோ, கோபத்திலோ சொல்லும் ஒற்றை வார்த்தை போதும்... குழந்தையின் மனதைப் புரட்டிப் போட. குழந்தைகளுடன் பேசும்போது உலகிலுள்ள மற்ற அனைத்து பிரச்னைகளையும் தூர எறிந்துவிட்டுப் பேசுங்கள்.

46. பெற்றோர், குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகள் எதையாவது செய்து பெற்றோரின் கவனத்தைப் பெற முயல்வார்கள். அதிக குறும்பு செய்வது, எதையாவது உடைப்பது... இப்படி. குழந்தை விழுந்து அழுதால்தான் நீங்கள் ஓடிப் போய் எடுப்பீர்களெனில், குழந்தை அடிக்கடி தானாகவே போய் விழுந்து அழும் என்பது உளவியல் உண்மை.

47. சரியான கவனம் பெற்றோரிடமிருந்து கிடைக்காத பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிலும் நன்னடத்தையுடன் இருப்பதில்லை. அடுத்தவர்களைக் கிண்டல் செய்தோ, தாழ்வாகப் பேசியோ கவனம் ஈர்ப்பார்கள். தங்கள் மனக் குறையை வேறு செயல்களால் நிரப்ப முயலும் உத்தியே இது. எனவே, குழந்தைகளின் அடிப்படைத் தேவையை அறிந்து கொள்ளுங்கள்.

48. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எங்கும் பரவியிருக்கின்றன. எனவே, குழந்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள். குழந்தைகளிடம் அன்றைய நிகழ்ச்சிகளை முழுவதும் கேளுங்கள். அவர்களின் நடவடிக்கை, முகபாவம் இவற்றில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உஷாராகிவிடுங்கள்.

49. 'குட் டச்', 'பேட் டச்'... இரண்டையும் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கலாம். ''யாராவது 'பேட் டச்' பண்ணினா மம்மிகிட்ட சொல்லணும்'' என அறிவுறுத்தி வைக்கலாம். குழந்தையை யாரும் தொந்தரவு செய்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைய இது உதவும்.

50. பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகவே வரும்! இன்னொரு முக்கியமான விஷயம், பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல... ஆண் குழந்தைகளுக்கும்தான்!

சொல்லிக் கொடுங்க!

51. குழந்தைகள் தினமும் செய்தித்தாளைப் படிக்க ஊக்கப்படுத்துங்கள். நாளிதழ்களிலுள்ள செய்திகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்புச் செய்திகளை விவாதியுங்கள். அவை குழந்தைகளின் பொது அறிவுத் திறனை வளர்க்கும். உதாரணமாக... நாட்டுத் தலைவர்கள், இடங்கள் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேசலாம்.

52. புதிய புதிய நூல்களை வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். அவர்களை ஏதேனும் நூலகங்களில் இணைத்து விடுங்கள். வீட்டிலேயே அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் கிடைக்க வழி செய்யுங்கள். இவையெல்லாம் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும்.

53. பிள்ளைகள் எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது பெரும்பாலான பெற்றோரின் கவலை. குழந்தைகளுக்குக் கவனம் ஊட்டுவது ஒரு கலை. அவர்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கவனத் திறனை ஊக்குவிக்கலாம். பத்து நிமிடத்தில் பொம்மைகளை அடுக்கி முடிப்பது, பத்து நிமிடத்தில் பத்து கற்களைப் பொறுக்கி வருவது, பொருட்களை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து காகிதத்தில் அதன் பெயர்கள் எழுதுவது... இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது!

54. பெரிய வேலையை சிறிது சிறிதாகப் பிரிக்கும் கலையை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, வீட்டுப் பாடம் என்பது பெரிய வேலையென்றால் அதை சிறிது சிறிதாகப் பிரியுங்கள். 'இப்போது சயின்ஸ்... சாப்பிட்டதுக்கு அப்பறம் மேத்ஸ்...' - இப்படி உங்களுக்கு வசதிப்படும் வகையில் பிரிக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், குழந்தைக்கு அடிக்கடி 'பிரேக்' கொடுங்கள். தொடர்ந்து மணிக் கணக்கில் குழந்தை படித்துக் கொண்டே இருக்கக் கூடாது!

55. குழந்தைகளுக்கு எதிர்கால விருப்பம் என்ன என்பதைக் கேளுங்கள். அவற்றை ஒரு படமாக வரையச் சொல்லலாம். அப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் அறிவுத் திறன் கூர்மையாகும். அவர்களுடைய கற்பனை சக்தியும் அதிகரிக்கும்.

56. குழந்தைகளுக்கான 'பஸில்' விளையாட்டுகள் இப்போதெல்லாம் கடைகளில் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன... எண்களை வரிசைப்படுத்துவது, வார்த்தைகளை வரிசைப்படுத்துவது, எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகள் அமைப்பது இப்படி நிறைய. அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.

57. பொருட்களை ஒரு கதை போல நினைவில் வைப்பது குழந்தைகளுக்கு மிகவும் எளிய செயல். எனவே, நினைவில் வைக்க வேண்டியவற்றை ஒரு கதை வடிவில் அவர்களிடம் சொல்லுங்கள். உதாரணமாக, பத்து விலங்குகளின் பெயர்களை நினைவில் வைத்திருக்க, அவற்றைக் கொண்டு ஒரு கதை உருவாக்குங்கள்.

அட்டென்ஷன் டு ஆரோக்கியம்!

58. குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக ஆர்வத்தை உருவாக்குங்கள். ஓடி ஆடி விளையாடும்போது அவர்களுடைய உடல் ஆரோக்கியமடைகிறது. சிறு வயதிலேயே உருவாக்கும் விளையாட்டு ஆர்வம் அவர்களுடைய நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.

59. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதற்கு குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உண்ணப் பழக்குங்கள். விரைவிலேயே அந்தச் சுவை அவர்களுக்குப் பிடித்தமானதாகும். அல்லது காய்கறிகள் உண்ணும் பழக்கம் உருவாகும். இது அவர்களுடைய ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்.

60. குழந்தைகளுக்கு சிப்ஸ், பீட்ஸா, குளிர்பானங்கள் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே கொடுங்கள். தேவையற்ற கொழுப்புகள் அதிகம் உடலில் சேர இவை காரணமாகிவிடும். அதனால் இவற்றை அறவே தவிர்க்க முடிந்தால் அதுவே சிறப்பானது.

61. குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் பழகவும், உற்சாகமாக விளையாடவும் அனுமதியுங்கள். ஆனால், 'விளையாடட்டும்' என்று ஓரமாக அமர்ந்து புத்தகம் படிக்காதீர்கள். எப்போதும் உங்கள் கவனம் குழந்தையின் மீதே இருக்கட்டும்!

அறையும் அக்கறையும்!

62. குழந்தைகளை வசீகரிக்கும் சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் படிக்கும் அறையில் மெலிதான நிறத்தில் பெயின்ட், நல்ல வெளிச்சம், காற்றோட்டம், தூய்மை எல்லாம் இருக்க வேண்டும். சுவர்களில் விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் என படங்கள் இருக்கலாம். படிக்கும் அறையில் குழந்தைகளை உற்சாகமாக பிடித்து வைக்க இவைஎல்லாம் உதவும்.

63. குழந்தைகளின் படுக்கை அறையில் ஒரு கான்சப்ட் பெயின்ட்டிங் செய்யுங்கள். உதாரணமாக, கடல் என்பது உங்கள் ஐடியா எனில், சுவர்களுக்கு நீல நிறம் கொடுத்து, மீன்கள், கடற்குதிரைகள், டால்பின்கள் என வரைந்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.

64. சிற்சில இடங்கள், அறைகள், இருட்டு இதையெல்லாம் கண்டு குழந்தைகள் பயப்படும். சில வேளைகளில் மிரண்டு போகும். அப்போதெல்லாம் கிண்டலடிப்பதோ, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதோ கூடாது. அவர்களிடம் அமர்ந்து, ''அங்க ஒண்ணும் இல்லடா'' என்று பயத்தை போக்குங்கள்.

பாகுபாடு வேண்டாமே!

65. குழந்தைகளிடையே சண்டை சச்சரவு வருவது வெகு இயல்பு. அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதில் கவனமாக இருங்கள். குழந்தைகள் எப்படி பிரச்னையைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டுங்கள். குறிப்பாக, சில குழந்தைகள் கத்திப் பேசும், அழும், அடிக்கும். அவையெல்லாம் தவறு என்பதையும், பிரச்னை வந்தால் எப்படி அணுகவேண்டும் என்பதையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள்.

66. உங்கள் இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டு நியாயம் கேட்க உங்களிடம் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் இரண்டு குழந்தைகளும் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். நீங்கள் எது சரி என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். எது சரியான முடிவு என்பதைப் புரிந்த பின் அதை அழுத்தமாகச் சொல்லிவிடுங்கள்.

67. குழந்தைகளுக்குள்ளே பகிர்தலை ஊக்கப்படுத்துங்கள். பகிர்ந்து கொடுப்பது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது எனும் எண்ணத்தை உருவாக்குங்கள். இது குழந்தைகள் பிரச்னைகளைத் தங்களுக்குள்ளேயே தீர்க்கும் வழியை உருவாக்கும்.

68. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ''மூத்தவ இந்த வயசுல நல்லா பேசிட்டாளே... இவளுக்கு ஏன் இன்னும் பேச்சு வரல?'' என ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்பாதீர்கள்.

69. இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி பெயர் வைப்பது, ஒரே மாதிரி உடை உடுத்தி அழகு பார்ப்பது பெற்றோரின் விருப்பம். அதைக் குழந்தைப் பருவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகள் தனித் தனி அடையாளங்களோடு, தனித் தனிக் குணாதிசயங்களோடு அவர்கள் போக்கில் வளரட்டும். ஒருவரை முழுமையாக சார்ந்து வாழ்வது பிற்காலத்தில் அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை உருவாக்கும். எனவே, இரட்டைக் குழந்தைகளை இரண்டு தனித் தனிக் குழந்தைகளைப் போல பாவித்து வளருங்கள்.

70. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் உங்கள் கவனத்தை ஒட்டுமொத்தமாக முதல் குழந்தையிடமிருந்து விலக்கி விடாதீர்கள். இது பெரும்பாலான பெற்றோர் செய்யும் மாபெரும் தவறு. இதனால் முதல் குழந்தையின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும். இரண்டாவது குழந்தையை மூத்த குழந்தை வெறுக்கவும் இது காரணமாகிவிடும். எப்போதும் முதல் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பையும் அதனிடமே கொடுங்கள்.

71. மூன்றாவது குழந்தை பிறந்தால் சிக்கல் இன்னும் அதிகம். முதல் குழந்தை எப்போதும் ஸ்பெஷல். கடைக்குட்டிக்கு கவனம் நிச்சயம் தேவை. இரண்டாவது குழந்தை கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உண்டு. இதை 'மிடில் சைல்ட் சிண்ட்ரோம்' என்பார்கள். 'பெற்றோர் நம்மிடம் பாகுபாடு காட்டாதவர்கள்' எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு எப்போதுமே மிகவும் அவசியம்.

72. இன்னொரு குழந்தை பிறந்தவுடன் மூத்த குழந்தையின் நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியும். குறிப்பாக, அதிக குறும்பு, சண்டித்தனம் இவை எல்லாம் வெளித் தெரியும். அதற்குக் காரணம் வலுக்கட்டாயமாகப் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதே என்பதைப் புரிந்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இளைய குழந்தையைக் கவனிக்கும்போது மூத்த குழந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

73. 'போகப் போக சரியாயிடும்' என இந்தப் பிரச்னையை விட்டு விடாதீர்கள். குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை குறைவு, சோர்வு, கவலை என பல்வேறு விஷயங்களை இது உருவாக்கிவிடும். மன அளவில் சோர்ந்தால் உடல் நோய்களும் அவர்களுக்கு வர வாய்ப்பாகி விடும்.

நீங்கள் டாக்டர் அல்ல!

74. ''குழந்தைக்குக் காய்ச்சல்... ஏதாச்சும் மருந்து கொடுங்க'' என்று தெருமுனையில் இருக்கும் மருந்து கடைகளில் போய் நிற்காதீர்கள். குழந்தைகளுக்கான மருத்துவம் ரொம்பவே சிக்கலானது. குழந்தைகளின் நோய்கள், அதன் தன்மை, காரணம் எல்லாம் அறிய டாக்டரைப் பார்ப்பது மிக மிக முக்கியம். கிடைக்கும் டாக்டரிடம் போகாமல், குழந்தைகள் நல டாக்டரை மட்டுமே அணுகுங்கள். ரெகுலாக அதே டாக்டரிடம் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

75. குழந்தையை மருந்துவரிடம் அழைத்துச் செல்லும்போது 'மெடிக்கல் ஹிஸ்டரி' ரொம்ப முக்கியம். பழைய மருந்து சீட்டுகள், தடுப்பூசி தகவல்கள் போன்ற அனைத்தையும் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

76. மருந்து கொடுப்பது குறித்து சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் டாக்டரிடம் கேளுங்கள். 'நிறைய பேர் காத்திருக்கிறார்களே' என அவசரப்பட்டு வெளியே வந்து குழம்பாதீர்கள். 'எந்தெந்த மருந்து எந்தெந்த நோய்க்கு, அதை எப்போதெல்லாம், எவ்வளவு கொடுக்கவேண்டும்?' என்பதன் பதில் தெளிவாக தெரிய வேண்டும்.

77. மருந்து வாங்கும்போது அது குழந்தைகளுக்கானது என்பதைக் குறிக்க 'for pediatric use' என எழுதப்பட்டிருக்கிறதா என பாருங்கள். இல்லையேல் கடைக்காரரிடம் கேளுங்கள். அப்படிக் குறிப்பிடப்படாத மருந்தைக் கொடுக்கும் முன் நிச்சயம் டாக்டரைக் கலந்தாலோசியுங்கள்.

78. மருத்துவர் சொன்னதற்கும் கடைக்காரர் தருவதற்கும் வித்தியாசம் உண்டா என பாருங்கள். 'இந்த மருந்து இந்த நோய்க்குரியதுதானா' என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

79. மருந்துகளின் அளவுகளில் கவனம் செலுத்துங்கள். 100 எம்.ஜி., 200 எம்.ஜி. என எந்த அளவை டாக்டர் சொல்கிறாரோ அதை வாங்குங்கள். இந்தக் கணக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது.

80. மருந்தில் மிக முக்கியமானது 'எக்ஸ்பயரி டேட்'. காலாவதியான மருந்துகள் விஷத்துக்குச் சமம். எந்த மருந்து வாங்கினாலும், அதன் எக்ஸ்பயரி டேட் பார்க்க மறக்காதீர்கள். பாட்டில் மருந்து வாங்குகிறீர்களெனில் பாட்டிலிலும், வெளிப்புறக் கவரிலும் போடப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி டேட் ஒரே மாதிரி இருக்கிறதா என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

81. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது ஜூஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றுடன் கலந்து கொடுக்காதீர்கள். தூய்மையான தண்ணீருடன் மட்டுமே கொடுங்கள்.

82. பெரியவர்களுக்குரிய மருந்துகளுக்கும், குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத விகிதாச்சார வித்தியாசம் உண்டு. பெரியவர்களுக்கான மருந்தைக் 'கொஞ்சமாக' கொடுத்தால் குழந்தைகளின் நோய் குணமாகும் என சிலர் நம்புவார்கள். அது மிகத் தவறு. குழந்தையின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்.

83. குழந்தைக்கு ஒரு நாள் எத்தனை தடவை மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்யட்டும். 'குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது... அதனால் இன்னும் இரண்டு தடவை எக்ஸ்ட்ராவாக கொடுப்போம்' என நீங்களே மருத்துவர் ஆக வேண்டாம்.

84. மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத, அவர்கள் எடுக்க முடியாத இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் பெரியவர்களுடைய மருந்தை சாப்பிட்டுவிட்டால் சிக்கலாகிவிடும்.

85. குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. அதை சரிவரக் கவனிக்க வேண்டும். உங்களுக்குரிய கிரீம்களை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். குழந்தை ஆயில், கிரீம் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

86. குழந்தைகளுக்கான கிரீம்களை அடிக்கடி மாற்றாதீர்கள். இவை குழந்தையின் உடலைக் காயப்படுத்திவிடும். தோலுக்கு மிகவும் தீங்கானது இது.

87. குளிர்காலம், வெயில் காலம் என காலத்துக்குத் தேவையான கிரீம்களைப் பயன்படுத்துவது சிறப்பானது.

88. 'குழந்தையின் காலில் முள் குத்துமே... கல் குத்துமே' என கவலைப்படாதீர்கள். இரண்டு வயது வரை குழந்தைகள் செருப்பு இல்லாமலேயே நடப்பதுதான் ஆரோக்கிய மானது. குழந்தையின் பாதங்கள் வலுவடைய இது முக்கியம்.

தாய்ப்பாலுக்கு தடா போடாதீங்க!

89. தாய்ப்பால் ஊட்டுவதன் அருமை பெருமைகளை பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்பதில் தவறில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு தாயால் மட்டுமே தர முடிந்த வரம். எனவே, தவறாமல் கொடுங்கள். இது குழந்தைக்கு அலர்ஜி நோய் வராமல் தடுக்கும். நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

90. ஒரு வயது வரை நன்றாகத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்புகளும் குறையும்.

91. உலகிலுள்ள எந்த பால் பவுடரை விடவும் உயர்வானது தாய்ப்பால்! ஒரு விஷயம் தெரியுமா? தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஏதேனும் நிறுவனம் விளம்பரம் செய்தால் ஜெயில்தான்... இங்கல்ல, ஸ்காட்லாந்தில்!

92. தாய்ப்பால், வலி நிவாரணியாகவும் செயல்படும். குழந்தைகளுக்கு வலிகளைத் தாங்கும் வலிமை தருவதில் தாய்ப்பால் பெரும் பணியைச் செய்கிறது. மிக மிக எளிதாக ஜீரணமாகக் கூடிய ஒரு உணவும் தாய்ப்பால்தான்.

93. குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். நீங்கள் முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

94. எதிர்பாராத விதமாக குழந்தைகள் மரணமடைவதை ஆங்கிலத்தில் SIDS(Sudden Infant Death Syndrome )என்கிறார்கள். இத்தகைய சிக்கல்களிலிருந்து குழந்தையைக் காப்பாற்றும் வலிமை தாய்ப்பாலுக்கு உண்டு.

95. படைப்பு அற்புதமானது. பிறந்த உடனே குழந்தைக்கு பதினைந்து இஞ்ச் தூரம்தான் பார்க்க முடியுமாம். அது தாயின் மார்பு மற்றும் முகத்துக்கு இடைப்பட்ட தூரம். குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே பால் குடிக்க இயற்கை தந்த வரம் இது எனலாம் ! இது தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை வலுவாக்கும்.

பொம்மைகள் உஷார்!

96. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் முன் நன்றாக யோசியுங்கள். குழந்தையின் அறிவையும் வளர்ப்பது போன்ற பொருட்களை வாங்குங்கள். சிறு குழந்தைகளுக்கு விலங்குகளின் பொம்மைகள் வாங்கினால், அவை அதன் பெயர்களைக் கற்றுக் கொள்ளும். அதை வைத்து ஒரு மிருககாட்சி சாலை வைத்து விளையாடும். நீங்கள் அதன் மூலம் குழந்தைக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

97. ஐந்து வயதுக் குழந்தைக்கான விளையாட்டுப் பொருளை இரண்டு வயதான குழந்தைக்குக் கொடுக்காதீர்கள். வயதுக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்களில் பாதுகாப்பு சங்கதிகள் இருக்கும். உதாரணமாக, சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் பாகங்கள் பெரிது பெரிதாக இருக்கும். வாயிலோ மூக்கிலோ எதையும் குழந்தை நுழைக்க முடியாது.

98. காந்தப் பொருட்களுடன் கூடிய விளையாட்டுகளைத் தவிர்ப்பது உத்தமம். அது குழந்தையின் வயிற்றில் சென்று விட்டால் உயிருக்கே ஆபத்து. காந்தத்துடன் இணைந்த எழுத்துக்களை வாங்கி சிலர் ஃப்ரிட்ஜில் ஒட்டி வைப்பதுண்டு. சில நாட்களிலேயே அந்த காந்தம் அந்த எழுத்துக்களிலிருந்து கழன்று விழுந்து விடும். அதைக் குழந்தை தெரியாமல் விழுங்கிவிட வாய்ப்பு உண்டு.

99. 'பரிசாக வந்துவிட்டதே' என்பதற்காக பாதுகாப்பற்ற விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். பரிசு என்பது உங்கள் மீதான அன்பை இன்னொருவர் காட்டுவது மட்டுமே. அது பரிசளிப்பவரின் வசதி சம்பந்தப் பட்டதும்கூட! குழந்தையின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டியது நீங்கள்தான்.

100. பென்சில், கிரையான்ஸ் போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். விலையைப் பார்க்காமல் நச்சுத் தன்மையற்ற பொருட்களாக பார்த்து வாங்குங்கள். ஆபத்தான பொருட்களை வாங்கிக் கொடுப்பதைவிட வாங்காமல் இருப்பது மிகவும் நல்லது.

ஈன்ற பொழுதினும்
நீங்கள் பலமுறை பெரிதுவக்க வாழ்த்துக்கள்!