Thursday, November 12, 2009

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிது வெளிச்சம்!
புல்லின் நிழலில் இளைப்பாறுங்கள்

500 ரூபாய்க்கு ஒரு காசோலையும் அத்துடன் ஒரு கடிதமும் இணைந்த தபால் ஒன்று என் முகவரிக்கு வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் பரிச்சயமானதாக இல்லை.

'அன்புடைய ராமகிருஷ்ணன், என் மகளின் இதயச் சிகிச்சைக்குப் பண உதவி தேவை என்றுநாளி தழில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் அனுப்பிய உதவிக்கு நன்றி. கடந்தவெள்ளிக் கிழமை என் மகள் அறுவை சிகிச்சைக்கு முன்பா கவே இறந்துவிட்டாள். ஆகவே, அவளுக்காக உங்களைப்போல பலரும் அனுப்பிய பணம் அவசியம் அற்றுப் போய்விட்டது. இனி, அப்பணம் எங்களுக்குத் தேவை இல்லை.

என் மகள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பணம் முழுவதையும் அதை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பி வருகிறேன். என்னைப்போல உதவி வேண்டும் இன்னொரு நபருக்கு அந்தப் பணம் பயன்படக்கூடும் என்ற நல்லெண்ணம்தான் இதற் கான காரணம். இதை நீங்கள் தவறாக எண்ணவேண் டாம். முகம் தெரியாத மனிதருக்குச் செய்யும் உதவி, கடவுளுக்குச் செய்யும் அரும்பணி. அதற்காக என் குடும்பம் உங்களுக்கு என்றும் நன்றியுடையது. இப்படிக்கு செல்வ விநாயகம்' என்றிருந்தது.

அந்தச் செய்தி ஒரு பக்கம் என்னைத் துக்கம் அடையச் செய்தது. இன்னொரு பக்கம் இவ்வளவு உயர்வான மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்களா என்று வியப்படையவும் வைத்தது. எவ்வளவு உன்னதமான நேர்மை.


தன் பெண் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு இந்தப் பணம் தங்களுக்கு எதற்கு? அதை உரியவர்களுக்குத் திருப்பி அனுப்புவதன் வழியே அது யாரோ ஒருவருக்குப்பயன்படும் என்று எண்ணுவது எத்தனை உயரிய சிந்தனை.

உதவி என்று பணம் அனுப்பியவர்களில் எவரும் கணக்கு கேட்கப்போவது இல்லை. எப்படிப் பணம் செலவழிக்கப்பட்டது என்று கண்காணிக்கப்போவதும் இல்லை. ஆனால், வறுமையான சூழலுக்குள்ளும் அந்தப் பணம் தங்களுக்குத் தேவையற்றது என்று திருப்பித்தரும் மனதுகொண்ட அந்த மனிதர் மிக உயர்வானவராகத் தோன்றினார்.

அன்று இரவு எல்லாம் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். எங்களிடம் மீதமாக உள்ள பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க முன்வருகிறோம் என்று யாராவது எங்காவது சொல்லியோ, நடந்தோ கேள்விப்பட்டு இருக்கிறேனா? நினைவில் இல்லை. பொதுமக்களுக்கு உரிய பணம் கோடிக்கணக்கில் பயன்பாடு இன்றி முடங்கிக்கிடக்கின்றன. உதவியின் பெயரால் திரட்டப்படும் பெருவாரியான பணம் முறைகேடான வழிகளில் செலவழிக்கப்படும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மருத்துவச் சேவை செய்வதைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிக்கொண்ட நிறுவனங்கள், தனிநபர்கள் பெருகிவிட்டதைக் காலம் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. இவ்வளவு கெட்டு அழிந்த சூழலுக்குள் அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்று திருப்பித் தரும் மனது ஒரு மனிதருக்கு வருகிறது என்பது நம்பிக்கை தரும் செயல். இன்றைய மருத்துவச் செலவுகள், நோயை விடக் கொடிய வலியாக உருவெடுக்கின்றன. நோய்மை உருவாக்கிய பயத்தை விட, மருத்துவமனைகள் உருவாக்கிய பயம் அதிகமாகிறது.

நோயின்போதுதான் ஒவ்வொரு மனிதனும் தன் வயதை மறந்துபோகிறான். குழந்தையைப்போல யாரோ தன்னை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறான். அன்புக்காக ஏங்கத் துவங்குகிறான். வேறு எந்தச் சூழலை விடவும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட பிறகு, கையில் காசு இல்லாமல் போவதுதான் மிக மோசமான துரதிர்ஷ்டம். மருந்துகள் நோயில் இருந்து மனிதனை விடுவிக்கக் கூடும். ஆனால், தொடர்ந்த அக்கறையும் அன்புமே நோயாளியைப் பூரண சொஸ்தமாக்குகிறது. இயல்புக்குத் திரும்பச் செய்கிறது.

வில்மா ருடால்ஃப் என்ற ஓட்டப் பந்தய வீராங்கனையைப்பற்றிய புத்தகம் ஒன்றினை வாசித்தேன். 1960-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸில் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்ற அமெரிக்க வீராங்கனை. உலகின் மிக வேகமாக ஓடும் பெண் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்.

இந்த வெற்றியின் பின்னே ஒரு பெண்ணின் மன உறுதி மறைந்து இருக்கிறது. வில்மா சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, கால்கள் சூம்பிப் போய் படுக்கையிலே கிடக்கிறாள். அவள் வயதுப் பிள்ளைகள் வீதியில் விளையாடும்போது அவளால் வீட்டுக்குள்கூட நடக்க முடியவில்லை. உதவிக்கு அம்மாவோ, சகோதரிகளோ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. வலது கால் வளைந்து இருந்தது.

மருத்துவர்கள் அவளைத் தன் வாழ்நாள் முழுவதும் சூம்பிய கால்களுடன் மூலையில்தான் கிடக்கக் கூடும் என்று சொன்னார்கள். ஆனால், அதைவில்மாவின் தாய் நம்பவில்லை. தன் மகள் நடப்பாள், ஓடுவாள், ஏன் பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவாள் என்று உறுதியாகச் சொன்னாள். அது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை என்று மருத்துவர்கள் பரிகாசம் செய்தார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் வில்மாவுக்கு நடக்க உதவி செய்தாள். மற்ற சகோதரிகளும் துணை நின்றார்கள். 10 வயது வரை இந்த சிகிச்சை நாள் தவறாமல் நடைபெற்றது. வில்மா லேசாகக் காலை ஊன்றி நடக்க ஆரம்பித்தாள். தினமும் அவளை ஐந்து மைல் தூரம் நடக்கவைப்பது என்று அம்மா வைராக்கியமாக அவளை இழுத்துக்கொண்டு நடந்தாள். இரவில் கால் வீக்கம் கண்டுவிடும். வலியில் கண்ணீர் பெருகும். சகோதரிகள் அவள் வீங்கிய காலுக்கு ஒத்தடம் தருவார்கள். ஒவ்வொரு நாளும் சித்ரவதையாக இருக்கிறதே என்று வில்மா கண்ணீர்விடுவாள். ஆனால், அம்மா... அவளை நடக்கவும், ஓடவும் பழக்கினாள். வலி மறந்து போய் ஓட வேண்டும் என்ற வெறி மனதில் உண்டானது. 12 வயதில் தானாக ஓடத் துவங்கினாள். அக்காவுடன் பந்து விளையாடத் துவங்கினாள். அதன் பிறகு, கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. சில நாட்கள் அவள் மணிக்கணக்கில் ஓடினாள். வியர்வையும், களைப்பும், வலியும் ஒன்றுசேர்ந்து அவளை அமுக்கின. ஆனால், அவள் துவண்டுவிடவில்லை. 1956-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றாள். அடுத்த ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்கள்.

வில்மாவின் வெற்றிக்கு யார் காரணம்? எங்கே இருந்து அவளது நம்பிக்கை உயிர் பெற்றது என்று நேர்காணலில் கேட்டபோது, தன்னால் நோயில் இருந்து விடபட முடியும் என்று அம்மா முழுமையாக நம்பினாள். அதற்குக் குடும்பமே தன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டது. ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு இருந்தால், கால்கள் முடங்கி வீட்டில் மூலையில்கிடந்து செத்துப் போயிருப்பேன் என்று அறிவித்தாள் வில்மா.

அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க, எனக்கு வில்மாவை விடவும் அவளது தாய் மிக உன்னதமான வளாகத் தோன்றினாள். எவ்வளவு பெரிய போராட் டம். தன் மகள் பந்தயத்தில் ஓடி வென்றபோது அந்த தாயின் மனது எவ்வளவு உவகைகொண்டு இருக்கும். அந்த நிமிஷத்தில் அந்தத் தாயின் கண்களில் இருந்து பீறிட்ட கண்ணீரைப்போல உலகில் உயர்வானது வேறில்லை. நம்பிக்கை ஒரு விதை. அது மனதில் ஆழமாக ஊன்றிவிட்டால், அதில் இருந்து நிச்சயம் அதிசயங்கள் விளையத் துவங்கும்.

நம்பிக்கையை உருவாக்குவதும், வளர்த்து எடுப்பதும் எளிதானது இல்லை. அது நம் வேலை இல்லை என்றே பெரும்பாலும் நம்புகிறோம். அது உண்மை இல்லை. நம்பிக்கை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய ஆதாரப் பணி.

'Pay it Forward' என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த் தேன். மிகச் சிறப்பான படம் என்று வகைப்படுத்தமுடி யாது. ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய படம்.

டிரேவர் மெக்கன்சி என்ற 11 வயதுச் சிறுவன் அமெரிக்கப் பள்ளி ஒன்றில் படிக்கிறான். அவனது பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் ஐடியா ஒன்றினை ஒவ்வொரு மாணவனும் மாதிரித் திட்டமாக தயாரித்து வந்து, வகுப்பறையில் விளக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள்.

டிரேவர் ஒரு திட்டத்தை முன்மொழிகிறான். அந்தத் திட்டம் என்னவென்றால், நாம் முகம் அறியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்ல வேண்டும். அவர்கள் இதுபோல தொடர்ந்து செய்ய ஆரம் பித்தால், இரண்டு வாரங்களில் 47 லட்சத்து, 82

ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். நாம் செய்ய வேண்டியது முன் அறிமுகம் இல்லாத மூன்று நபர்களுக்கு உதவ முன்வருவது மட்டுமே என்கிறான். இதை வகுப்பறையில் மாணவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால், ஆசிரியர் இது அருமையான திட்டம் என்று பாராட்டுகிறார்.

டிரேவர் இந்தத் திட்டத்தைத் தானே நடை முறைபடுத்திப் பார்க்க முயற்சிக்கிறான். தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத போதை மருந்து அடிமை ஒருவனுக்கு உதவி செய்கிறான். வீட்டுக்கு அழைத்து வந்து உணவு தருகிறான். இந்த உதவும் கரங்களின் சங்கிலி உருவாக்கம் துவங்குகிறது. டிரே வரின் இந்த முயற்சியைப் புரிந்துகொள்ளாத அம்மா கோபப்படுகிறாள். அவன் வீட்டைவிட்டு வெளியே போகிறான். நண்பனுக்கு உதவி செய்யப் போய், போக்கிரிகளிடம் மாட்டிக்கொண்டு கத்திக் குத்து வாங்குகிறான்.

ஆனால், இந்த உதவும் சங்கிலியால் பலன் பெற்ற ஒரு பத்திரிகையாளன் எளிமையான இத்திட்டம் பற்றி எழுதத் துவங்குகிறான். திட்டம் வெற்றி பெற ஆரம்பிக்கிறது. உலகெங்கும் உதவும் சங்கிலி வளர்ந்துகொண்டே போகிறது.
ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்கிறது இந்தப் படம். இது மறுக்க முடியாத உண்மை. இந்த உதவிக்கு எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. உதவி என்பது செயலாகவோ, பணமாகவோ, கற்றுத்தருவதாகவோ, ஆறுதலாகவோ, அன்பாகவோ, ஒரு நல்ல செய்தியை, சிந்தனையை அடுத்தவருக்குச் சொல்வதாகவோ என எப்படியும் இருக்கலாம். ஆனால், அது விருட்சம் போலக் கிளைவிட்டுக்கொண்டே செல்ல வேண்டும். இந்த சங்கிலித் தொடர் உதவிகள் வழியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள்.

இந்தப் படம் உருவாக்கிய பாதிப்பில் இன்று நீண்டு சங்கிலித் தொடர் போல உதவும் முயற்சிகள் உருவாகி உள்ளன. முகம் தெரியாமல் மனிதர்கள் பொருளுதவி செய்கிறார்கள். உலகெங்கும் இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது.

இதற்கான முதற்பணி உங்களால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்யுங்கள். அறிந்த, சிறந்த விஷயங்களை மூன்று பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். ஆலமரத்தின் நிழல் மட்டுமில்லை... புல்லின் நிழல்கூட ஏதோ ஒன்றுக்கு இளைப்பாறுதல் தருகிறது என்பதுதான் உண்மை!